- அடுத்த அமர்வில் தக்க பதிலடி கொடுப்பேன்
வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி லக்ஷனா நாகராஜன்
வவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் எனக்கு எதிராக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த பிரச்சாரங்களுக்கு எதிராக அடுத்த சபை அமர்வில் தக்க பதிலடி கொடுப்பேன் என வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி லக்ஷனா நாகராஜன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (18) இடம் பெற்ற போது நான் கடும் சுகயீனத்தின் மத்தியில் கலந்து கொண்டிருந்தேன்.
தமிழ் நாட்டின் முன்னால் முதல்வர் அமரர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் சிலை வவுனியாவில் வைப்பதற்கான பிரேரணை வவுனியா நகர சபைக் கொண்டு வரப்பட்டது.
எனினும் கடும் சுகயீனம் காரணமாக என்னால் தொடர்ந்தும் சபையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை வவுனியாவில் வைப்பது தொடர்பில் வாக்கெடுப்பு வந்ததால் எனது முழு ஆதரவையும் வழங்குவதோடு, என்னுடைய வாக்கை ஆதரவாக வழங்குகிறேன் என, சபையின் தலைவர் மற்றும் உப தலைவரிடம் தெரிவித்து விட்டு சபையில் இருந்து வெளியில் வந்தேன்.
ஆயினும், நான் சபையில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளதாக முக நூல் மற்றும் இணையங்கள் சிலவற்றில் செய்திகள் வெளி வந்துள்ளது.
குறித்த செய்தி பொய்ப்பிரச்சாரம் என்பதோடு, அதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
குறித்த தவறான தகவல்களை வெளியிட்டவர்களுக்கு அடுத்த அமர்வில் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நான் தக்க பதிலடி கொடுப்பேன் என தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.” என அவர் தெரிவித்தார்.
(மன்னார் குறூப் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)
from tkn