எம்.பிக்களின் ஒழுக்க மீறல்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்

பிரிட்டிஷ் பாராளுமன்ற முறையை பின்பற்றி புதிய ஒழுக்கக் கோவை

வெளிநாடுகளிலுள்ள பாராளுமன்றங்களைப் போன்று, இலங்கையிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கம் மீறி செயற்படுவது தொடர்பில் முறையான சட்டமொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் கரந்தெனிய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இப்பாடசாலையின் 75 வருட நிறைவை யொட்டி பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சியிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்: அண்மையில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற மோசமான நிகழ்வுகளை நான் குறிப்பிடத் தேவையில்லை. பாடசாலைகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் மாணவர்கள் நடந்துகொள்ளும் விதமாகவே பாராளுமன்றத்தில் சில எம்.பிக்கள் செயற்பட்டனர். அவ்வாறு செயற்படுவது நாட்டுக்கு முன்மாதிரியாகாது. அதற்காக, நான் வெட்கப்படுகின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செயற்படும் போது நாடு எவ்வாறு முன்னேற முடியும். பாராளுமன்றத்தை சிலர் கால் துடைப்பமாக எத்தித்தள்ளி விட்டனர். இவ்வறான செயற்பாடுகளால் நாட்டில் ஜனநாயக அரசியல் இல்லாதொழிந்து போகும்.

எமது பாராளுமன்றத்திற்கு சிறந்த நற்பெயரும் பாராட்டுதல்கள் இருந்தன.எனினும் தற்பொழுது இவ்வாறு நடந்ததெப்படி என்பதை நானே எனக்குள் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று மற்றவர்களிடமும் அது பற்றி கேட்கவிரும்புகின்றேன்.

கடந்த இரு மாத காலமாக இளைஞர் யுவதிகள் இது தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிட்ட தகவல்களை நோக்கும் போது, எனக்கு வெட்கமாக இருந்தது. இது போன்றவற்றை தடுப்பதற்கு சில நாடுகளில் முறைமையுள்ளது.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை எமது பாராளுமன்றத்திலும் நடைமுறைப் படுத்தி ஒழுக்க கோவை ஒன்றை உருவாக்குவது அவசியமாகும்.

பாராளுமன்றத்தில் ஒழுக்கம் சீர்குலையும் போது அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். சாதாரண மக்களுக்கு முன்மாதிரியாகும் விதத்தில் பாராளுமன்றத்தை உருவாக்குவது முக்கியமாகுமென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை