கருணாவின் குற்றச்சாட்டு வேடிக்கையானது

கிழக்கு ஆளுநரை நியமித்தது பிரதமர் அல்ல; ஜனாதிபதியே 

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் நியமன விடயத்தில் கருணா அம்மான் சம்பந்தன் ஐயாவையும் சுமந்திரனையும் குற்றம் சாட்டிவருவது வேடிக்கையானது.ஆளுநரை நியமதித்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்ல.அவரது கட்சியின் தலைவரான ஜனாதிபதியே என கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். 

வெல்லாவெளியில் இடம்பெற்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். 

இவ் வைபவத்தில் முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி, இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

இங்கு தொடர்ந்து பேசிய இராஜாங்க அமைச்சர், 

கருணா அம்மான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளை.இவரது கட்சியின் தலைவர் பிரதமரல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆவார். அவரே கிழக்கு மாகாண ஆளுநரை நியமித்தார்.

இதை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும் சம்பந்தன் ஐயா மீதும் சுமந்திரன் மீதும் அவர் குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயமாகும்? வெறுமனே இன வாதத்தை விதைப்பதனூடாக எதையுமே அறுவடை செய்யமுடியாது.கிழக்கு அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் காலம் காலமாக ஒன்றித்து வாழுகின்ற மாவட்டம்.

இங்கு இரு சமூகமும் இரு கண்களைப் போன்றவை.ஒன்றை ஒன்று பிரித்து ஒரு காலமும் நிம்மதியாக வாழ முடியாது. 

தேவை ஏற்படும் போது தமக்கு ஆதாயம் தேவைப்படும் போது சில அரசியல் வாதிகள் இனங்களிடையே முறுகலை உண்டு பண்ணி ஆதாயம் தேட முனைவது தொடர்ந்தேர்ச்சியாக நடந்து வருகின்ற விடயங்கள். இது குறித்து தமிழ், முஸ்லிம் சமூகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.  

(மட்டக்களப்பு குறூப் நிருபர்)

Thu, 01/31/2019 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை