இனவாதத்தை தூண்டி அரசாங்கத்தை கைப்பற்றும் சதி

அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காது என்றும் தற்போதைய அரசாங்கம் அடிப்படைவாதத்திற்கு எதிரானது என்றும் பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை தூண்டி, அரசாங்கத்தைக் கைப்பற்றும் ஒருவகை சதியே இது. அடிப்படைவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை பிரயோகிக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், கண்டி மற்றும் மாவனல்லைப் பிரதேசங்களில் இடம்பெற்ற இனவாதத்தைக் தூண்டும் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய மேற்படி பாதிப்புக்குள்ளான விகாரைகளுக்கு நேரில் சென்ற அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சேதங்களை நேரில் பார்வையிட்டு உரிய நட்டஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் கிரியெல்ல,

அனைத்து மதங்களிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். எனினும் அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் அடிப்படைவாதத்தை தோல்வியுறச் செய்வதற்கும் அனைத்து மதங்களினதும் முக்கியஸ்தர்கள் எம்மோடு இணைந்துள்ளனர். அது மகிழ்ச்சியான விடயமாகும்.

கண்டி, மாவனெல்லை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஒளிவுமறைவு எதுவும் கிடையாது.

அடிப்படைவாதத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதை அரசாங்கம் என்ற வகையில் நாம் நடைமுறைப்படுத்துவோம். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 01/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை