இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாவிடில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
நவம்பர் 09 முதல் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்பதால் ஆகக்கூடியது நவம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாவிடில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாகவே அவர் அறிவிப்பு விடுத்தார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (28) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு இதற்கு மேலும் எந்தவொரு அரசியல் கட்சியிடமோ அரசியல்வாதியிடமோ கோரிக்கை விடுக்க, தான் தயாரில்லையென சுட்டிக்காட்டிய தேசப்பிரிய, தேர்தல் முட்டுக்கட்டையை களைந்து பாராளுமன்ற செயன்முறைகளை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, சபாநாயகர் மற்றும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பிலோ அல்லது தனி நபர் என்ற வகையிலோ மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி நீதிமன்றம் செல்ல முடியாத இக்கட்டான நிலையில் தான் இருப்பதாகக் கூறிய அவர், யாரேனும் தேர்தலை நடத்தக் கோரி நீதிமன்றம் சென்றால் அதற்குரிய தகுந்த விளக்கத்தை ஆணைக்குழு சார்பில் முன்வைக்க தயாரென்றும் அவர் தெரிவித்தார்.
- லக்ஷ்மி பரசுராமன்
from tkn