இன விகிதாசாரத்தை பாதிக்கும் குடியமர்த்தல்களை எதிர்க்கிறோம்

நியாயமான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களும், புலம்பெயர் சமூகமும் ஆதரிப்பர் - சம்பந்தன்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு

மக்களும் பிராந்திய, மாகாண அரசுகளும் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப்பகிர்வையுடைய ஒரு புதிய அரசியல்யாப்பு கொண்டு வரப்படும்போது அது நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் ஆதரவை வழங்குவார்களென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்புக்குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார். இச் சந்திப்பின்போதே இரா. சம்பந்தன் இவ்வாறு அவரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன்,

புதிய அரசியல்யாப்பு, நாடு, ஒருமித்ததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருப்பதை உறுதி செய்யும் ஒன்றாக அமையும், அதே சந்தர்ப்பத்தில் மக்களும் பிராந்திய, மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்களில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான அதிகாரப்பகிர்வை கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் கொண்டு வரப்படும் புதிய அரசியல் யாப்பு நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவை வழங்குவர் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப் பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த இரா சம்பந்தன், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000ஆம் ஆண்டு அறிக்கை, மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அனைத்துக் கட்சி தெரிவுக்குழு, மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைத்திருந்தன எனவும் தெரிவித்தார். கடந்த முப்பது வருடங்களாக பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன நிலையில் தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது இதனை நாட்டின் நன்மை கருதி நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் இது எனது நாடு. இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம். எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் ஜெப்ரி வான் ஓர்டனுக்கு இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.

அரசியலமைப்புச் சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்புச் சபையின் மீள் நியமனத்தால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமை கடந்தகாலங்களில் இடம் பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ள தையும் அவர் எடுத்துக்காட்டினார்.

மேலும் விளக்கிய இரா சம்பந்தன், அரசாங்கத்தை மீளக்கொண்டு வருவதற்கு நாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும். பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் நாடு இருந்தபோது பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தை மீளக்கொண்டு வருவதற்கான ஆதரவை கொடுத்தோம். புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன்,

கடந்த டிசம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்பதாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த சுமந்திரன்,

தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே உள்ள அதேவேளை, இலங்கையில் நியாயமான அதிகாரப்பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் தமது ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது. . இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும் போக்காளர்களை மக்கள் தோற்கடித்துள்ளனர்.

காணிவிடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், "அரசாங்கத்தினால் பிரதேசங்களின் இனவிகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடியேற்றங்களையே நாங்கள் எதிர்க்கிறோம். மாறாக இயற்கையாக மக்கள் குடியமர்வதை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்கள் தமது நிலத்தையும் கலாசாரத்தையும் பேணுவதில் மிகவும் உள்ளார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜெப்ரி வான் ஓர்டன், 2009 இற்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் எனதான் எதிர்பார்த்ததாகவும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாததையிட்டு தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை