முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று சேவையாற்றவேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி, நாவற்குடாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நான்கு வருட ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு ஏற்படவில்லை. தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாத நிலையே உள்ளது.கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்கப்பட்ட வரை மாற்றுமாறு கோரி எதிர்வரும் 18ம் திகதி மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாண ஆளுநரை மாற்றுமாறு மகஜர் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டு வருகின்றோம்.
அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டினால் மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றார்கள்.தேர்தல் காலங்களில் மக்கள் சரியான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும்.
இந்த ஆளுநர் நியமனத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும் தருவோம் என சம்பந்தன் ஐயா கூறியுள்ளார்.இவர்கள் இதனை எதிர்க்க வில்லை. இவ்வாறான பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)
from tkn