இஸ்ரேலியரால் மற்றுமொரு பலஸ்தீனர் சுட்டுக் கொலை

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் சக வீரர் மீது கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்றதாகக் கூறி இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் பலஸ்தீனர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை சுட்டுக் கொன்றுள்ளார். இந்தக் கொலையை பலஸ்தீன சுகாதார அமைச்சு உறுதி செய்தபோதும் அதுபற்றி பலஸ்தீன அதிகாரிகளால் மேலதிக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

“நப்லுஸ் நகரில் இருந்து வாகனத்தில் வந்த தாக்குதல்தாரி வாகனத்தை விட்டு இறங்கி அருகில் சோதனைச் சாவடியில் இருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு வீரர் மீது கத்தியால் குத்த முயன்றார். பதில் நடவடிக்கையாக மற்றோரு வீரர் தீவிரவாதி மீது சூடு நடத்தி கட்டுப்படுத்தினார்” என்று இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த தாகுதலில் எந்த ஒரு இஸ்ரேல் வீரருக்கும் காயம் ஏற்படவில்லை.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை கடந்த 2014 ஆம் ஆண்டு முறிந்தது. மேற்குக் கரையில் பலஸ்தீனர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுய அதிகாரம் இருந்தபோதும் அங்கு இஸ்ரேலின் அதிகாரம் விஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை