தோட்ட தொழிலாளர் சம்பள பேச்சு இணக்கப்பாடின்றி நிறைவு

3 வருட ஒப்பந்தம்;
3 கட்ட சம்பள அதிகரிப்பு

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நேற்று தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

மூன்று வருடகால ஒப்பந்தம் என்பதுடன் 625 ரூபா அடிப்படைச் சம்பளம் என்ற நிலைப்பாட்டில் முதலாளிமார் சம்மேளனம் இருப்பதாக அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, தயா கமகே ஆகியோர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். இதன்படி 875 ரூபாவே கிடைக்குமென முதலாளிமார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரும் இத் தருனத்தில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்திருக்கும் இந்த சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என்பதுடன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமென்றும் அவர் தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (10) கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்கள தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

பேச்சுவார்த்தையின் முதற் கட்டமாக தொழில், தொழில் உறவுகள் மற்றும்சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகேவுக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கும் 22 தோட்டகம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்குமிடையில் காலை 11.00 முதல் 12.00 மணிவரை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன்வந்து முதல் வருட சம்பள அதிகரிப்பு 625.00 ரூபாவும் இரண்டாம் வருடம் சம்பள அத்கரிப்பு 650.00 ரூபாவும் மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபா அதிகரிப்பதாகவும் ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும் 80.00 ரூபா வரவு கொடுப்பனவும் 30.00 ரூபா விலைகொடுப்பனவும் மேலதிகமாக எடுக்கும் கொழுந்துக்கு கிலோ ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க முன் வந்தன. இதனை தொடர்ந்து கலந்துரையாடல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 12.00 மணி முதல் 1.30 வரை கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற் சங்கங்களுக்கும் தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சருக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்குமிடையில் நடைபெற்றது. இதன் போது இரு அமைச்சர்களினாலும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி முடிவு எடுக்கபட்ட விடயங்களும் தீர்மானங்களும் முன் வைத்தனர்.

இதனை பரீசிலித்து பார்த்த தொழிற்சங்கங்களில் முடிவுகளின்றி தொழிலாளர்களிடம் கேட்டு அவர்களின் முடிவுபடி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி எழுந்து சென்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திடும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், கூட்டு தொழிற்சங்கங்களின் தலைவர் எஸ். இராமநாதன் உட்பட முன்னாள் அமைச்சரும் இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுஜா சிவராஜா, இ.தொ.கா உப தலைவர்களான சட்டதரணி கா. மாரிமுத்து, எம். இராமேஸ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன், இ.தொ.கா வின் உதவிப் பொதுச் செயலாளர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் உட்பட கூட்டு தொழிற்சங்கங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Fri, 01/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை