மனுதாரருக்கு ரூ. 100,000 செலுத்த உத்தரவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பில் அறிக்கையொன்றை பெறுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த தக்ஷிலா லக்மாலி ஜயவர்தன என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு, இன்றையதினம் (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் மனநிலை தொடர்பில் வைத்திய சான்றிதழை பெறுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடுமாறு, மனுதாரர் குறித்த மனுவில் கோரியிருந்தார்.
இன்றைய தினம் (07) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர முன்னிலையில் குறித்த மனு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றம் குறித்த மனுவை தள்ளுபடி செய்தது.
அத்துடன், குறித்த மனு தொடர்பான வழக்குச் செலவாக ரூபா ஒரு இலட்சத்தை செலுத்துமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
from tkn