போதைப்பொருளை ஒழிக்கும் யுத்தத்திற்கு தலைமை தாங்க தயார்

ஜனாதிபதி மைத்திரி

முப்பது வருட கொடூர பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்கு நிகரான யுத்தமொன்றை முன்னெடுத்து போதையிலிருந்து நாட்டை விடுவிக்க தயாரெனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதற்கு தலைமை தாங்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அன்று வெளிப்படுத்திய திறமைகள், துணிச்சல் மற்றும் வீரத்தை இந்த மானிடப் பணிக்காக நிறைவேற்றுவதற்கு முன்வருமாறும் அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். தாம் அதற்குத் தலைமைத்துவம் வழங்க தயாராக உள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு தேவையாகக் கருதி அதற்கு வழங்கக்கூடிய உச்சளவு முன்னுரிமையை வழங்குவதாகவும் இதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு செயற் திட்டத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகளை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழா கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்றது. இவ் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களினால் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கிய யுகத்திற்கு தான் முற்றுப்புள்ளி வைப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படும்போது வருடாந்த இடமாற்றம், கொள்கை சார்ந்த இடமாற்றங்கள் என்பவற்றுக்கு ஏற்ப வழங்கப்படுவதைப்போன்று அதற்கு வெளியில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களின்போதும் அந்த இடமாற்றத்திற்கான காரணம் இடமாற்ற கடிதத்திலேயே குறிப்பிடப்பட வேண்டுமென்ற பணிப்புரையை தாம் விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்யப்படுவது அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் தாய் நாட்டுக்காக தமது பணிகளை நேர்மையாக நிறைவேற்றுவதற்காகவாகும் எனக் குறிப்பிட்ட அவர்,ஜனாதிபதி என்ற வகையிலும் பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக கடமையாற்றும் அதிகாரிகளை பாதுகாப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஊழல் மற்றும் கடத்தல்காரர்களின் கட்டளையின்பேரில் எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் இடமாற்றத்திற்குள்ளானால் அல்லது ஏதேனும் சவால்களுக்கு அல்லது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் அதுபற்றி தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிப்பதற்கு தேவையான முறைமையை வகுத்து விசேட பிரிவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அதேபோன்று போதைப்பொருளை பயன்படுத்துகின்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் அதிகார சபை ஒன்றை தாபிப்பது குறித்து புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றை நாளைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் இந்த அதிகார சபை எதிர்வரும் ஒரு சில வாரங்களுக்குள் தாபிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு தேவையாக கருதி அதற்கு வழங்கக்கூடிய ஆகக்கூடிய முன்னுரிமையை வழங்குவதாகவும் அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அரசாங்கம் இதற்கு சிறப்பாக நடவடிக்கை எடுக்கும்போது மனித உரிமைகளை குறிப்பிட்டு அந்த குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு சிலர் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் அவ்வாறு செய்வது முழு தேசத்தினதும் எதிர்காலத்திற்கு செய்யும் துரோகமாகும் என்றும் குறிப்பிட்டார்.

தான் அண்மையில் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் விஜயங்களின்போது இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கான தொழிநுட்ப உதவியை வழங்குவதற்கு அந்நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி உலகில் உள்ள அநேக நாடுகள் பயன்படுத்தும் அந்த தொழிநுட்ப அறிவை பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கு அவ்விடயத்திற்கு பொறுப்பாக இருந்த அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன், இன்று நாட்டுக்கு பேரழிவை கொண்டுவந்திருக்கும் போதைப்பொருள் பாவனை பரவி வருவதற்கு அவர்கள் அனைவரும் பதில்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்

மேலும் ஆபத்தான போதைப்பொருட்களை அறிந்துகொள்வதற்கு அந்த நவீன தொழிநுட்ப உபகரணங்கள் விரைவாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்வது பற்றி கண்டறிவதற்காக தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை