முல்லைத்தீவு வெள்ள அனர்த்தம்; முழுமையான தரவுகள் வெளியீடு

*28,493.5 ஏக்கர் பயிர்கள் அழிவு
*11,237 கால்நடைகள் இறப்பு
*80.45 கி.மீ. வீதிகள் சேதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் 10,118 குடும்பங்களை சேர்ந்த 32,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 86 வீடுகள் முழுமையாகவும் 2,297 வீடுகள் பகுதி அளவிலும் சேதமாகியுள்ளன. 24,493.5 ஏக்கர் பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன. மாடுகள், ஆடுகள், கோழிகளென 11,237 கால்நடைகள் இறந்துள்ளன. கடற்தொழிலில் ஈடுபடுகின்ற 22 படகுகளும் 224 வலைகளும் காணாமல் போயுள்ளன என்றும் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கடும் மழை, வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கும் விவசாய காணிகள், கால்நடைகள், பொதுச் சொத்துக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் நேற்று முழுமையான தரவுகளை வெளியிட்டபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இழப்புகள் தொடர்பான தரவுகள்

20,146.5 ஏக்கர் நெற்பயிர் செய்கை காணிகளும் பகுதியாகவும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 3 849 ஏக்கர் நிலக்கடலை செய்கை சேதமடைந்துள்ளன. உளுந்து, பயறு போன்றனவும் முழுமையாக சேதடைந்துள்ளன. 498 ஏக்கர் மரக்கறிச்செய்கை சேதமடைந்துள்ளன.

கால்நடைகளும் உயிரிழந்துள்ளன 3,012 மாடுகள், 418 எருமை மாடுகள்,912 ஆடுகள், 6,895 கோழிகள் இறந்துள்ளன. இதனை நம்பியிருந்த விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கால்நடைகளின் கொட்டில்கள் சேதமடைந்துள்ளதுடன் மேய்ச்சல் தரைகளும் அழிவடைந்துள்ளன.

மீன்பிடித்துறையில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற 15 படகுகள், 187 வலைகள் காணாமற் போயுள்ளன, நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களின் 07 படகுககள், 37 வலைகளும் காணாமல் போயுள்ளன.

நன்னீர் மீன்பிடிக்காக மீன்குஞ்சுகள் குளங்களில் விடப்பட்டன. அவைகளும் வெள்ளநீரினால் அடித்து செல்லப்பட்டுள்ளன. மீண்டும் குளங்களில் மீன் குஞ்சுகள் விடவேண்டிய தேவை உள்ளது.

86 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன 2,297 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதிகளும் கட்டுமானங்களும் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளன.

வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கான வீதிகள் 84.2 கிலோமீற்றர் வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன 29 கால்வாய்கள் பாதிக்கப்பட்டுள்ள 03 விவசாய வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன

பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் மாந்தை கிழக்கில் 39 வீதிகளான 36.5 கிலோமீற்றர் வீதிகளும் துணுக்காய் பிரதேச சபைக்கு உட்பட்ட30.9 கிலோமீற்றர் வீதிகளும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட 119.8 கிலோமீற்றர் வீதிகளும் பாலங்கள், கல்வெட்டு போன்ற 60க்கும் மேற்பட்டவை பாதிக்கப்ட்டுள்ளன.கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட 93.25 கிலோமீற்றர் கொண்ட82 வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாசன திணைக்களத்திற்குரிய 20 குளங்களில் குளங்களுக்கு கீழான கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு கீழான பத்து சிறுகுளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் சிறுசிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மாங்குளம் குறூப் நிருபர்

 

Sat, 01/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை