மனம் நொந்து பணிக்குச்சென்ற தோட்டத் தொழிலாளர்கள்
சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டபோதிலும் தோட்டப் பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பவில்லை.
சம்பள உயர்வு திருப்தியாக இல்லை எனத் தெரிவித்து ஹற்றன், கொட்டகலை பகுதிகளில் நேற்றும் (29) ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், அநேகமான தோட்டங்களில் தொழிலாளர்கள் ஒரு வித விரக்தியுடன் மனம் நொந்தவர்களாகப் பணிக்குச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
வாக்குறுதியளித்ததுபோல், தமக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளொன்றுக்கு 700 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தையும் தேயிலை/இறப்பர் விலைக் கொடுப்பனவான 50 ரூபாயையும் சேர்த்துத் தமக்குப் புதிய ஒப்பந்தத்தில் 750 ரூபாய் மாத்திரமே கிடைப்பதாகத் தெரிவிக்கும் தொழிலாளர்கள், இதுவரை 730 ரூபாய் பெற்று வந்தததால், அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு வெறும் 20 ரூபாய் மட்டுமே அதிகரிப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து கிடைக்க வேண்டிய நிலுவைச் சம்பளத்திற்கும் இதுவரை எந்த உத்தரவாதமும் இல்லையென்றும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
(நமது நிருபர்)
from tkn