இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (09) முதல்உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் இராணுவத் தளபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்தார்.
இராணுவத்தின பிரதம அதிகாரியாக சேவையாற்றி வந்த மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ இம்மாதம் முதல் வாரத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவத்தின் 53 ஆவது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
1964 ஆம் அண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி மாத்தளையில் பிறந்த மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார். ஆரம்ப பயிற்சியினை முடித்துக்கொண்டு 1986 ஆம் ஆண்டு வெளியேறிய அவர் இராணுவத்தின் உயர் பதவிகள் பலவற்றை வகித்து வந்துள்ளார்.
யுத்த காலத்தின் போது பல்வேறு துறையில் திறமைகளை வெளிக்காண்பித்த இவர், இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக சேவையாற்றினார்.
யுத்தம் முடிவுற்ற பின்னர் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியல் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகவும் பிரதி நிரந்தரவதிவிட பிரதிநிதியாகவும் சேவையாற்றிவிட்டு நாடு திரும்பிய அவர், இறுதியாக இராணுவத்தின் நிறைவேற்று ஜெனரலாகவும் கஜபா ரெஜிமன்டின் கேர்ணலாகவும் சேவையாற்றி வந்த நிலையில் இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
from tkn