தேசிய பொங்கல் விழாவில் சம்பந்தன்
தனிப்பட்ட கட்சி அரசியல் போட்டிகளால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியை நீடிக்கக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அதேநேரம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய பொங்கல் விழா நேற்று இரவு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில நடைபெற்றது.
இதில் அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் உரையாற்றுகையில்,
யுத்தத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்ற உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு உதவியது. அதனாலேயே யுத்தமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால், யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், தமிழர் பிரச்சினைக்கு இன்னும் தீர்வுகாணப்படவும் இல்லை. சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவுமில்லை.
இந்த நாட்டில் புரையோடிப்போய் இருக்கும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டேயாக வேண்டும். அரசியல் தீர்வு என்பது மிகவும் அத்தியாவசியமாகும்.
இங்கு சகல மக்களும் சமமாக மதிக்கப்படும் நிலை ஏற்படும் வரை முன்னேற்றம் ஏற்படாது.
நாங்கள் சம உரிமையுடன் வாழவேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி சகல மக்களும் சம உரிமையுடன் வாழும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்.
உலகம் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. காலத்தைக் கடத்தாது பிரச்சினைக்குத் தீர்வுகாணுங்கள் இவ்வாறு சம்பந்தன் கூறினார்.
தேசிய நல்லிணக்கம் அரச கருமமொழிகள்,சமூக முன்னேற்றம மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றுகையில்,
தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உழவர் திருநாளில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வழிபிறக்குமென்று இந்துக்களின் நம்பிக்கை.
இந்துக்களும், பெளத்தர்களும் கலாசாரத்தால் ஒன்றுபட்டவர்கள். பௌத்த விகாரைகளில் இந்துக் கடவுள்களையும் வழிபடுகிறார்கள்.
இந்த ஆண்டிலாவது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படவேண்டும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்
(நமது நிருபர்)
from tkn