புதிய ஆளுநர் பல்லின சமூகத்தின் தலைவராக செயற்பட வேண்டும்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆளுநர் பல்லின சமூகத்துக்குரிய தலைமைத்துவம் இல்லாமல் ஓரின சமூகத்துக்குரியவராக செயற்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காத்துக்கொண்டு இருக்காது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர்களை நியமித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலும் அதனடிப்படையிலேயே ஆளுநர் நியமனம் நடைபெற்றுள்ளது. இதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்துவது பிழையான விடயமாகும் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றலில் சனிக்கிழமை (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பிப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்து உரையாற்றுகையில் -

தற்போது சகல மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்து வருகிறார். அளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள் பல்லின சமூகத்தினுடைய தலைவர்களாக செயற்பட்டு சகலருக்கும் அபிவிருத்தி செய்ய வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.நடக்கப்போவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடு எதிர்நோக்கவிருந்த பாரிய ஆபத்தினை தடுத்துள்ளது.

 ஒக்டோபர் 26 ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சில ஊடகங்கள் கூட ஒரு தலைப்பட்சமாகச் செயற்பட்டன. எதிர்க்கட்சிகள் தொடர்பான எந்த செய்திகளும் வெளியிடவில்லை. அந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவும் வழங்க கூடாது நடுநிலை வகிக்கவும் கூடாது. எமது உறவுகள் காணாமல் போனமைக்கு காரணமானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என காணாமல் போனவர்களின் உறவினர்கள் எமக்கு பல கடிதங்களை அனுப்பினார்கள். எதிர்வருகின்ற தேர்தல்களில் எமது மக்கள் கவனமாக செயற்பட வேண்டும். தமது அரசியல் இலாபத்திற்காக பிழையான வதந்திகளை மக்கள் மத்தியில் கூறுவதற்கு மாற்று அணியினர் தயாராக உள்ளனர். மக்களின் ஆணையை விற்று சுயநல அரசியல் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றார்.

(ஏறாவூர் குறூப் நிருபர்)

Mon, 01/07/2019 - 09:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை