அடையாள அணிவகுப்பிற்காக நாளை வரை விளக்கமறியல்
பல்வேறு குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய 'ஆவா' என அழைக்கப்படும் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சி அம்மன் கோவிலுக்கு அருகில், இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்றைய தினம் (27) யாழ்ப்பாண குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரும் 19, 23, 25 வயதுடைய யாழ். மானிப்பாயை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து, சந்தேகநபர்கள் இன்றைய தினம் (27) யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அடையாள அணிவகுப்பின் பொருட்டு அவர்கள் நாளை (28) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
from tkn