மன்னார் மனித எலும்புக்கூடு மாதிரிகள் புளோரிடாவிற்கு

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 26 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இன்று(9) தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டு இடம்பெற்று வருகின்றது.227 வது நாளாகமேற்கொள்ளப்படும்அகழ்வு பணியானது நேற்று புதன்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்திருந்தது.அதனால் வளாகத்தை நாங்கள் முழுமையாக விரிவுபடுத்தியுள்ளோம்.

இந்த நிலையில் அவற்றை சீர் செய்து அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.மேலும் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் 6 மாதிரிகளை தெரிவு செய்துள்ளோம். குறித்த மாதிரிகளானது வேவ்வேறு மண் தட்டுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பொதுவான மாதிரிகளாக உள்ளது.

குறித்த மாதிரிகளில் எலும்பு மற்றும் பற்கள் உள்ளடங்களாக பெண்கள் என சந்தேகிக்கின்ற மாதிரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.மாதிரிகள் அனைத்தும் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு  இம்மாதம் 26 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதன் போது மரணம் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.

தற்போது வரை 288 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அவற்றில் 282 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப் நிருபர்– லம்பர்ட் ரொசாரியன்)

Wed, 01/09/2019 - 14:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை