வவுனியாவில் புகையிரதக் கடவை கேற்றை தகர்த்துக் கொண்டு உள்நுழைந்த இ.போ.சபை பேரூந்து:

 மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்

வவுனியா - மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையை உடைத்துக் கொண்டு இ.போ.சபை பேரூந்து உள்நுழைந்த நிலையில் புகையிரத மற்றும் பேரூந்து சாரதிகளின் விரைவான செயற்பாட்டால் சுமார் 50 பேர்வரையிலான பயணிகள் தப்பியுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பேரூந்து ஒன்று சென்றுள்ளது. குறித்த பேரூந்து வவுனியா - மன்னார் வீதியில் உள்ள காமினி வித்தியாலத்திற்கு அண்மையில் பயணித்த போது யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்திற்காக அப்பகுதியில் இருந்த புகையிரதக் கடவைக் கேற் மூடப்பட்டுள்ளது. எனினும் மூடப்பட்டதை அவதானிக்காத இ.போ.சபை பேரூந்து பாதுகாப்பு கேற் ஒன்றினை உடைத்துக் கொண்டு புகையிரதப் பாதைக்குள் நுழைந்தது. இதனை அவதானித்த புகையிரத சாரதி புகையிரதத்தின் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதேவேளை, சுதாகரித்த இ.போ.சபை பேரூந்து சாரதி உடனடியாக பேரூந்தை பின்பக்கமாக செலுத்தி விபத்தில் இருந்து பேரூந்தை காப்பாற்றினார். இதன் போது பேரூந்தில் இருந்த 50 வரைலயிலான பயணிகளும் கூச்சலிட்டு பதறியடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். இதன்பின் குறித்த புகையிரதம் தொடர்ந்தும் பயணித்தது.

குறித்த குழப்ப நிலை தணிவதற்குள், மற்றொரு புகையிரதம் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி அதே வழித்தடத்தில் வந்துள்ளது. இதன்போது புகையித கடவைக் காப்பாளர் புகையிரத பாதுகாப்பு கேற்றை மூடாது அசமந்தமாக இருந்துள்ளார். பயணிகள் புகையிரத கடவையை கடந்து சென்று கொண்டிருந்ததுடன், வாகனங்களும் பயணித்துள்ளன. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் வந்த புகையிரம் ஒலிச் சமிஞ்ஞை ஒலித்தபடி வேகத்தை கட்டுப்படுத்தி புகையிரதத்தை நிறுத்தியமையால் மீண்டும் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. 

இச் சம்பவங்கள் தொடர்பில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இ.போ.சபை பேரூந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.  

(வவுனியா விசேட நிருபர்)

Sun, 01/06/2019 - 14:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை