நானும் ஆரவ்வும் சமாதானமாயிட்டோம்!

“பிக் பாஸுக்கு முன்னாடி என்ன படம் வந்தாலும் நடிச்சுட்டிருந்தேன். இப்போ ரொம்ப நிதானமா படங்கள் தேர்வு செய்றேன். பொறுப்பு வந்துடுச்சுல்ல!”

என்று தனக்கே உரிய கிண்டலோடு அளவாக அழகாக பக்குவமாகப் பேசுகிறார் ஓவியா. 90ml, களவாணி-2, காஞ்சனா-3 என செலக்டிவ்வாகப் படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவருடனான நேர்காணலின்போது, ஆரவ் தொடங்கி மீம்கள் வரை என்று நிறைய பேசினார்!

“பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம் பட வாய்ப்புகள் எப்படி இருக்கு?”

“பிக் பாஸுக்குப் பிறகு என் வளர்ச்சி இப்படி இருக்கும்னு நானே நினைச்சதில்லை. ஒரே நேரத்துல மாடர்ன், ஹோம்லி... ரெண்டுவிதமான கதைகளும் வருது. விதவிதமா நடிக்கணும்னு முடிவெடுத்து கதைகளைத் தேர்ந்தெடுக்குறேன். வருடத்துக்கு ரெண்டு படம் பண்ணுனாலும் தரமா இருக்கணும்.!” 

“ ‘90 ml’ முடிஞ்சிடுச்சா?”

“ஆல்மோஸ்ட். அனிதா உதீப் பார்த்துப் பார்த்துப் பண்ணிக்கிட்டுருக்காங்க. எதுக்குமே கவலைப்படாத ஐந்து பொண்ணுங்களோட வாழ்க்கைதான் இந்தப் படம். அவங்க உலகத்துல சரி, தப்புனு எதுவும் கிடையாது. அன்றைய நாளை அழகாக்க அந்தப் பொண்ணுங்க என்ன செய்யணுமோ, செய்றாங்க. இதைத் தமிழ் ரசிகர்கள் வரவேற்கலாம் அல்லது எதிர்க்கலாம். படத்துல எனக்கு பில்டப் சீன்ஸ் இருக்கு; ஆக்‌ஷன் பண்ணியிருக்கேன். நிச்சயமா மரண மாஸா இருக்கும்!”

“ ‘களவாணி’யில நடிச்ச அதே குறும்புத்தனமான ஓவியாவை ‘K2’ படத்துல எதிர்பார்க்கலாமா?”

“ ‘களவாணி’ படத்துல விளையாட்டுத்தனமா திரிஞ்சுகிட்டிருந்த ஸ்கூல் பொண்ணு மகேஸ், அவளோட கல்யாணத்துக்குப் பிறகு மெச்சூரிட்டியோட எப்படித் தன் குடும்பத்தைக் கவனிச்சுக்கிறாங்க, பிரச்சினைகளைச் சமாளிக்கிறாங்கன்னுதான், ‘K2’ ல பார்க்கப்போறீங்க. சற்குணம் சார்தான் எனக்குத் தமிழ் சினிமாவுல பெயர் வாங்கிக்கொடுத்தவர். அவர் படங்கள்ல எனக்கு என்ன கேரக்டர் கிடைச்சாலும் நடிப்பேன்.”

“ ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்துல நடிச்சதுக்கு சோஷியல் மீடியாவுல ட்ரோல்ஸ் வந்துச்சே... கவனிச்சீங்களா?” 

“அது, ‘பிக் பாஸு’க்கு முன்னாடி நான் நடிச்ச படம். அப்போ, வர்ற வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாதுன்னு நினைச்சு, நடிச்சேன். தவிர, விஷ்ணு விஷால் என் ஃப்ரெண்ட். அவர் சொன்னதுனால கமிட் ஆனேன். ‘பிக் பாஸு’க்குப் பிறகு இப்படி ஒரு கேரக்டர் கிடைச்சிருந்தா, கண்டிப்பா நடிச்சிருக்கமாட்டேன். ‘பிக் பாஸு’க்கு முன்னாடி நான் நடிச்ச பல படங்கள் ரிலீஸாகாம இருக்கு. இப்போ அந்தப் படங்களை என்னை வெச்சு விளம்பரம் பண்றாங்க; ரிலீஸ் பண்ணாமலும் வெச்சிருக்காங்க. அதுல ஒரு பாலிவுட் படமும் இருக்கு. எல்லாமே ரிலீஸானா சந்தோஷம்தான். ஆனா, எப்பவோ நடிச்ச படத்தை இப்போ நடிச்ச படம்னு சொல்லி, என் ரசிகர்களை ஏமாத்தறதை நான் விரும்பல.”

“ ‘ராஜ பீமா’ படத்துல நீங்களும் ஆரவ்வும் சேர்ந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கீங்க. உங்க ரெண்டு பேர் பத்தி நிறைய தகவல்கள் சுத்துதே... உண்மை என்ன?”

“ ‘ராஜ பீமா’ படத்துல நான் ஓவியாவாதான் நடிக்கிறேன். அது ஒரு கேமியோ ரோல். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடியிருக்கார். என்னைப் புகழ்ந்து பாடல் வரிகள் எழுதியிருக்காங்க. ‘ஓவியா ஆர்மி’, ‘பிக் பாஸ் குயின்’ இப்படிப் பல வார்த்தைகள் அதுல வரும். ‘பிக் பாஸ்’ சமயத்துல எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்துச்சு. அதனால, நிறைய சண்டைகள். இப்போ நாங்க சமாதானமாகிட்டோம். நானும் ஆரவ்வும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், லிவிங் டு கெதர்ல வாழ்றோம்னு பல வதந்திகள் சுத்துது. எல்லாமே பொய்! அப்படி ஒண்ணு இருந்தா, நாங்களே சொல்வோம். ஆரவ் என் நண்பர், எனக்கு சப்போர்ட்டா இருக்கார். தட்ஸ் ஆல்!”

‘` ‘காஞ்சனா 3’ அப்டேட்ஸ்?”
“ ‘காஞ்சனா’ மாதிரி ஒரு ஃபேமிலி ஆடியன்ஸ் படத்துல நடிக்கணும்னு ரொம்பநாள் ஆசை. அது இந்தப் படம் மூலமா நிறைவேறிடுச்சு. கோவை சரளா மேடம்கூட நடிக்கிறது பெரிய சவாலா இருந்துச்சு. ஆன்-ஸ்க்ரீன்ல காமெடி பண்றது கஷ்டம். காமெடி பண்றது ஒரு வரம். எல்லோருக்கும் அது அமையாது. அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கறேன். இதுவரைக்கும் நான் வொர்க் பண்ணுன படங்கள்லேயே பெஸ்ட் ஸ்பாட், ‘காஞ்சனா-3’ செட்தான்!”

“படங்களைவிட வெளிநாட்டு நிகழ்ச்சிகள்ல அதிக ஆர்வம் காட்டுறீங்களே...?” 

“ஆமா, வெளிநாட்டு நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிறது மூலமா நமக்கு நிறைய பணம் கிடைக்கும். வெளிநாட்டு ரசிகர்கள் என்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டுக் கூப்பிடறாங்க. அவங்களைப் பார்க்கிறப்போ, நமக்கும் ஸ்ட்ரெஸ் குறையுது. சிங்கப்பூர், மலேசியா, துபாய்... இப்படிப் பல இடங்களுக்குப் போயிட்டு வந்தேன். என் வீட்டுக்கு அப்பப்போ கிஃப்ட்ஸ் வரும். பலபேர் வீட்ல இருந்து சாப்பாடு செஞ்சு அனுப்புவாங்க. சென்னையில் தனியா இருக்கிற எனக்கு, இதெல்லாம் சந்தோசத்தைக் கொடுக்குது. ரசிகர்கள் என்னை அவங்க குடும்பத்துல ஒருத்தியா பார்க்கிறது, எனக்கு சந்தோஷம் கிடைக்குது. ரசிகர்கள்தான் என் பலம்!”

“கல்யாணம்?”
“எனக்குக் கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா, வாழ்க்கை நம்மளை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்னு தெரியாது. நான் சின்ன வயசுல இருந்தே சுதந்திரமா வளர்ந்த பொண்ணு. தன்னிச்சையா செயல்படுவேன். அதனால, கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல செட் ஆகும்னு தெரியலை. தவிர, எனக்கு ஒருத்தரோட சப்போர்ட் வேணும்னு இப்போ வரைக்கும் தோணல.” (வி)

Thu, 01/03/2019 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை