நூற்றுக்கு ஒரு வீதமானோருக்கு பாரிய குற்றங்களுடன் தொடர்பு

உலகில் ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் நூற்றுக்கு ஒரு வீதமானோர் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம கிரிந்தை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 492 வது பொலிஸ் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மாஅதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் மா அதிபர்,

நாட்டிலுள்ள முழு சனத்தொகையிலும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு வீதமானோர் இருப்பது பிரச்சினையாக உள்ளது. இக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனிதர்களாக பிறந்தாலும் மிருகங்களைப் போன்று செயற்பட முற்படுகின்றார்கள். இதனால் இவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதிலும் நாம் நல்லோர் என கூறும் ஏனையோர் மௌனமாக இருந்து வருகிறார்கள். இவர்களது மௌனத்தினை கலைத்து இவர்களை உயிரோட்டமுள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும். எமது நாட்டிலுள்ள பொலிஸ் மா அதிபர்களில் என்னைப் போன்று யாரும் அசௌகரியங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கமாட்டார்கள் என நான் கருதுகிறேன். நான் இவை அனைத்தையும் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பொறுத்துக் கொண்டேன். எமது நாட்டிற்காக சேவையாற்றுவதற்கான சக்தி தொடர்ந்தும் என்னிடமுள்ளது என்பதினை நிரூபித்துள்ளேன்.

(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்)

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை