2018 ‘டேவிட் ஷெபர்ட்’ விருது
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போது நடுவராக செயற்பட்டுவரும் குமார் தர்மசேன 2018 ஆம் ஆண்டின் சிறந்த நடுவருக்கான ‘டேவிட் ஷெபர்ட்’ விருதை வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் மற்றும் ICC போட்டி நடுவர்களிடையே மேற்கொண்ட வாக்கெடுப்பின் மூலம் அவர் இவ்விருதை பெற்றுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது
குமார் தர்மசேன இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் இவ்விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தான் விருதுக்கு தெரிவானமை, ஏனைய இலங்கை அதிகாரிகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்ப்பதாக தர்மசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"இது எனக்கு மிகவும் திருப்திகரமான ஆண்டாகும் என்பதோடு, ICC இன் இந்த விருது எனக்கு கிடைத்துள்ள ஒரு சிறந்த கௌரவமும் மதிப்பும் ஆகும். நான் 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவ்விருதிற்கு தெரிவாகியுள்ளேன். இது, நான் விரும்பும் இத்தொழிலை தொடர்ந்தும் மேற்கொள்ள ஊக்குவிப்பாக அமையும். நான் கிரிக்கெட்டை உணர்வுபூர்வமாக மதிக்கிறேன் என்பதோடு, ஒரு வீரராகவும், நடுவராகவும் இவ்விளையாட்டிற்கு வழங்கப்படும் மதிப்பு தொடர்பில் அதன் வளர்ச்சிக்காக சவால் மிக்க வகையில் கடுமையாக உழைப்பேன்.
"எனது சாதனைகளுக்கு பின்னால் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது மனைவி மற்றும் எப்போதும் ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் செயற்படும் எனது பிள்ளைகளுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். எனது பயிற்றுவிப்பாளர், பீட்டர் மனுவேல் உள்ளிட்ட ஏனைய ICC பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், நான் நடுவராக இப்பணியை தொடர்ந்ததிலிருந்து பீட்டர் மனுவேல் வழங்கிய வழிகாட்டல் தொடர்பில் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.
அத்துடன் பல ஆண்டுகளாக என்னை உற்சாகமூட்டி, ஆதரவு வழங்கிய எனது சக நண்பர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமல்ல." என தெரிவித்துள்ளார்.
from tkn