9 பேர் சென்ற கார், மீன் லொறியுடன் விபத்து; 6 பேர் பலி

Rizwan Segu Mohideen
9 பேர் சென்ற கார், மீன் லொறியுடன் விபத்து; 6 பேர் பலி-Accident 6 Killed-3 Injured-Near Wennappuwa-Nainamadama Bridge

ஜா-எல துடெல்ல விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி

வென்னப்புவ நயினாமடம் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (20) அதிகாலை 3.15 மணி அளவில், கொழும்பு - சிலாபம் வீதியில், சிலாபம் நோக்கி பயணித்த கார் ஒன்று அதே திசையில் அதற்கு முன்னால் பயணித்த மீன் லொறி ஒன்றின் பின்புறமாக மோதியதில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது குறித்த காரில் சாரதி உள்ளிட்ட 9 ஆண்கள் பயணித்துள்ளதோடு, விபத்தை அடுத்து பலத்த காயங்களுக்கு உள்ளான அவர்கள் நீர்கொழும்பு மற்றும் மாரவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய மூன்று பேரில் இரண்டு பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் மற்றும் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் சடலம் மாரவில வைத்தியசாலையிலும் ஏனைய இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை நேற்று பிற்பகல் (19) ஜா-எல, துடல்ல புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்துள்ளார்.

கணவன், மனைவி அவர்களது 8 வயது மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த நிலையில், கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றில் மோதியதில் மனைவியும் அவரது 8 வயது மகளும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 01/20/2019 - 07:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை