அது தொடர்பான போதிய அறிவின்மையே காரணம் என வாக்குமூலம்
ஹொரவப்பொத்தானை, கிரலாகல தொல்பொருள் வனப்பகுதியில் உள்ள தூபியின் மீது ஏறி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இறுதிதி ஆண்டு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தினால் நேற்று முன்தினம் (22) மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 3 ஆம் நூற்றாண்டு கால தொல்பொருள் வரலாற்றைக் கொண்ட குறித்த தொல்பொருள் கட்டடம் மீது ஏறியமை, அவமதித்தமை ஆகின், தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த மாணவர்கள், கடந்த வருடம் (2018) ஜனவரி மாதம் தங்களது விடுமுறையின்போது ஹொரவப்பொத்தானை நகருக்கு அண்மித்த, கிரலாகலவிலுள்ள குறித்த பகுதி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர். இதன்போது பல்வேறு இடங்களிலும் இவ்வாறு புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
குறித்த புகைப்படங்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியதை அடுத்து, இப்பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ளது.
இதேவேளை, தூபியின் மீது அதனை அவமதிக்கும் வகையில் நாம் ஏறவில்லை எனவும், குறித்த விடயம் தொடர்பில் தாங்கள் உரிய அறிவின்மை காரணமாகவும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்மாணவர்கள் பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn