வட மாகாண ஆளுநர் இரணைமடுவிற்கு திடீர் விஜயம்.
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (18) முற்பகல் இரணைமடு நீர்தேக்கம் மற்றும் நீர்த்தேக்க செயற்திட்ட அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆரய்ந்தார்.
கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர், இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் வான்கதவுகளின் திருத்தப்பணிகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரைகளை வழங்கியிருந்ததுடன் அது தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கிலேயே இன்று (18) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகளில் 07 வான்கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து இரணைமடு நீர்த்தேக்கத்தை முழுமையாக ஜனவரி 31 ஆம் திகதி கையளிக்க இரணைமடு நீர்த்தேக்கத்தை புனரமைப்பு செய்த தனியார் நிறுவனம் உறுதியளித்துள்ளதுடன் பெப்ரவரி முதல் தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு தன்னார்வ ரீதியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவற்கும் முன்வந்துள்ளது.
இதேவேளை தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தின் 40 வீதமான நீர் மட்டுமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் 60 வீதமான நீர் சமுத்திரத்தை சென்றடைவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பிணிப்பாளரும் இரணைமடு நீர்த்தேக்க செயற்திட்டத்தின் செயற்திட்ட பணிப்பாளருமாகிய பொறியியலாளர் என். சுதாகரன், ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அதனையடுத்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான விசேட செயற்திட்ட முன்மொழிவை கூடியவிரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆளுநர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இதுதொடர்பில் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
from tkn