மாணவர் எண்ணிக்ைக 30 வீதத்தால் அதிகரிப்பு

*4,000 மாணவர்கள் உள்ளீர்ப்பு
*பெற்றோரின் வருவாய் எல்லை 10 இலட்சத்தால் அதிகரிப்பு

வருடாந்தம் 15 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே மகாபொல புலமைப்பரிசிலும் உதவித் தொகையும் வழங்கப்பட்டு வந்த நிலையில் அரசாங்கம் பெற்றோரின் வருடாந்த வருமான எல்லையை 15 இலட்சம் ரூபாவரை அதிகரித்துள்ளது.

இதேவேளை மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகையை பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்ைகயை 30 சத வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி இவ்வருடம் வழமையைவிட மேலதிகமாக 4,000 பட்டதாரி மாணவர்கள் மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகையை பெற்றுக் கொள்ளவுள்ளனர். தற்போது 7,000 பட்டதாரிகள் வருடாந்தம் மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகையை பெற்று வருவதாக மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பராக்கிரம பண்டார தெரிவித்தார்.

கூடுதலான மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதற்காகவே பெற்றோரின் வருடாந்த வருமானத்தை இவ் வருடம் முதல் 15 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம்.

இதுவரை வருடாந்தம் 5 இலட்சம் ரூபாவிலும் குறைவான வருமானம் பெறும் பெற்றோரின் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்களுக்கே மகாபொல புலமைப்பரிசிலும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இதேவேளை, மகாபொல புலமைப்பரிசில் மற்றும் உதவித்தொகை பெறுவோர் பட்டியலில் இவ்வருடம் முதல் கூடுதலாக மாணவிகளை சேர்த்துக் கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மகாபொல புலமைப்பரிசில் தொகையாக மாதாந்தம் 5,000 ரூபாய் பல்கலைக்கழக மாணவர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் என்றும் அவர் கூறினார்.

நமது நிருபர்

 

Sat, 01/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை