இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் குறூப் நிருபர்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர் நுழைவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் புதன்கிழமை (16) 130 ஆவது நாட்களை கடந்து நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் அகழ்வு பணிகள் குறித்து அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணி, 15ஆம் திகதியுடன் 130 ஆவது நாளாக நடை பெற்று வருகின்றது.

இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் இவ் வளாகத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 294 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 294 மனித எலும்புக்கூடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள் புளோரிடாவிற்கு அனுப்ப மன்னார் நீதி மன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி மனித எச்சங்கள் ஆய்வுக்காக புளோரிடா கொண்டு செல்லப்பட இருக்கின்றது. இந்த ஆய்வு முடிவுகள் ஒப்படைக்கப்பட்டு இரு வாரங்களில் அறிவிக்கப்படும். அது வரை மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Thu, 01/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை