கடந்த ஒன்றரை வருடங்களில் வடக்கில் 2,130 கிலோ கஞ்சா மீட்பு
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் 110 கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடற்படையினரும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து இன்று (26) பிற்பகல் 3.00 மணியளவில் வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைப்பற்றியுள்ளதுடன், மூவரை கைது செய்துள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இருவரும், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து, விற்பனைக்காக கொண்டு செல்ல வைத்திருந்த வேளையிலேயே வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டோர், 19, 45, 52 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்த தயார் நிலையில் வைத்திருந்த லொறி ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்த நபர்களையும் நாளைய தினம் (27) பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரொஷான் பெனாண்டோவின் மேற்பார்வையின் கீழ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன் கடந்த ஒன்றரை (1 ½) வருடங்களில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 2130 கிலோ கிராமிற்கும் அதிக கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
from tkn