பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி இன்று (23) நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் 1,000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
ஹட்டனிலும் போராட்டம்
அந்த வகையில், ஹட்டன் நகரத்திலும் இவ்விடயம் தொடர்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தொழிலாளர்கள் தினமும் உழைக்கும் உழைப்புக்கு அடிப்படை ஊதியமாக ஆயிரம் ரூபாயை வழங்கு என முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட மக்கள் பதாதைகளையும், கறுப்பு கொடிகளையும் ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
“முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளிடம் வேலையை மட்டும் வாங்காதே? தோட்டத் தொழிலாளர்களையும் கண் விழித்துப்பார். தோட்ட மக்களை காலால் மிதிகாதே? உடனடியான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கு? என்று பல்வேறு கோஷங்ளையும் எழுப்பி இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயம் வரை முன்னெடுத்தனர்.
பொகவந்தலாவையிலும் போராட்டம்
பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (23) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
சுமார் 1,000 ற்கும் மேற்பட்ட பொகவந்தலாவை கெம்பியன், லின்போர்ட், லொய்னோன், நோட்கோ, பெற்றசோ, டெவன்போட், பிரிட்லேன்ட், ஆல்டி, கொட்டியாகலை, மோரா, செல்வகந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்திலிருந்து எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் ஏந்தியவாறு பொகவந்தலாவை நகரம் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அவ்வழியான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலயங்கள் தடைப்பட்டன.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிருத்தி ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
from tkn