பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றும் இணக்கமின்றி நிறைவடைந்தது.
கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவிந்திர சமரவீர தலைமையில் நேற்று (22) பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன்படி இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் உறுதியாக இருந்ததால் இப் பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை.
இதுவரை காலமும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சருக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சருக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு மலையகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமானது. தற்போது சிலர் ''கைச்சாத்திடும் தொழிற் சங்கங்கள் மாத்திரம்தான் சம்பள உயர்வு பற்றி பேச வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியாது.
அவர்கள் தான் அதற்கு எல்லாம் பொறுப்பு'' என்று சொல்லித் தப்பித்து வருவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், கூட்டுத் தொழிற்சங்கங்களின் தலைவர் எஸ். இராமநாதன் உட்பட முன்னாள் அமைச்சரும் இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுசியா சிவராஜா, இ.தொ.கா உப தலைவர்களான சட்டத்தரணி கா. மாரிமுத்து, எம். ராமேஸ்வரன், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன், இ.தொ.கா வின் உதவி பொதுச் செயலாளர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் உட்பட கூட்டுத் தொழிற்சங்கங்களின் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
from tkn