மட்டு மாவட்டத்தில் படையினர் பயன்படுத்திய காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி நேற்று (27) வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர் காணி, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்பட்டு அதன் ஆவணங்கள் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

 இதையடுத்து கையளிக்கப்பட்ட காணி ஆவணங்களைக் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்திடம் கையளித்தார். இந்த வைபவம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (27) வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்றது.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகர, மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பிரிகேடியர் கபில உதலுவவெல, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் உட்பட திணைக்கள தலைவர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள், சமயத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2.5 ஏக்கரும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடத்தில் 0.5 ஏக்கரும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலையில் 0.75 ஏக்கரும் வெலிக்கந்த பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோணிதாண்ட மடுவில் 5ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

புதிய காத்தான்குடி தினகரன், கல்லடி குறூப், வெல்லாவெளி தினகரன் நிருபர்

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை