சபாநாயகரின் அவசர தீர்மானம் அரசியலமைப்பை மீறும் செயல்

என்னை விலக்காமல் மற்றவரை நியமித்ததால் நாட்டில் 2 எதிர்க்கட்சி தலைவர்கள்

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தன்னை விலக்காமல் புதிய ஒருவரை அப்பதவிக்கு நியமித்திருப்பதால் நாட்டில் தற்பொழுது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானம் அவசரமாக எடுக்கப்பட்டிருப்பது மாத்திரமன்றி அரசியலமைப்பை மீறும் வகையிலும் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில்

இரா.சம்பந்தன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பாராளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சியில் இரண்டாவது அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் . பாராளுமன்றத்தில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டீர்கள் . அந்த தீர்ப்பை நீங்கள் வழங்கிய போது அதுவே எனது இறுதி முடிவு எனவும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

நேற்றுமுன்தினம் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக அறிவித்தீர்கள். இரண்டுமுறை நீங்கள் மீளுறுதி செய்து எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் நியமித்த என்னை பதவியிலிருந்து நீக்காமல் இந்த அறிவிப்பை நீங்கள் செய்ததுமன்றி, இந்த செயலானது தற்போதைய பாராளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்க வைத்திருப்பதாகவே புலப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட அதிகளவு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொண்டுள்ளதை கேள்விக்குட்படுத்த முடியாது.பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் என்னை எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இதற்குக் காரணம் என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இந்த இரு கட்சிகளினதும் ஒரு சாரார் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகார தலைவர்,அரசாங்கத்தின் தலைவர் மட்டுமல்லாது பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் ஒரு அமைச்சராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பாராளுமன்றத்திற்கு தெரிவான இன்னும் பலர் அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தனர்.

இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்படுவதானது முறையற்ற செயலாக அமைந்திருக்கும். இந்த பின்னணியில் தான், உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் பாராளுமன்ற சம்பிரதாய மற்றும் சாசன முறைப்படி பாராளுமன்றில் இரண்டாவது பெரும்பான்மையுள்ள கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்படுவதை நடைமுறைப்படுத்தி என்னை நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இரண்டுமுறை ஏற்றுக்கொண்டீர்கள்.

அரசியல் யாப்பு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய உயர்மட்டதில் நீதித்துறையினால் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சில முடிவுகள் இந்த விடயங்கள் தொடர்பில் எட்டப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில்தான் மேற்குறித்த எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் நீங்கள் தீர்மானமொன்றை வழங்கியிருக்கின்றீர்கள். நீதிமன்ற தீர்ப்புக்கமைய கடந்த 16ஆம் திகதி பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், ஆனால் அமைச்சரவை ஒன்றோ அல்லது அரசாங்கம் ஒன்றோ இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை. 18ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள் சபையிலே கடந்து வந்து அரசாங்க தரப்பில் அமர்ந்து கொண்டனர். அரசாங்கம் ஒன்று நியமிக்கப்படாத இந்த பின்னணியில் அவசரமாக இன்னொமொருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கான தேவை இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

தற்போது பதவியிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரை நீக்காமல் அப்படியான அறிவிப்பை செய்தமையானது விடயங்களை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் அக்கட்சியிலிருந்து விலகி, ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையானது வெற்றிடமாக உள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த குறித்த உறுப்பினர், நீங்கள் அறிவித்த அந்த நாளில் பாராளுமன்ற உறுப்பினராக கூட இல்லை என்பதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீங்கள் எடுத்த தீர்மானமானது அவசரமாகவும் எமது அரசியலமைப்பை மீறும் வகையிலும் இருக்கின்றதாகவே கருதப்படுகின்றது.

மேலே நான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் இலங்கை தனது மிக முக்கிய சட்டமான அரசியலமைப்பினை மதிக்காத ஒரு தோல்வியை நோக்கி நகருகின்ற நாடாக மாறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

பிளவுபடாத, பிரிக்க முடியாத இலங்கை நாட்டில் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ விரும்பும் பிரஜைகள் இந்த நடவடிக்கையை இந்த நாடு இன்றைக்கு இருக்கும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு மூல காரணமாக அமைந்த பெரும்பான்மைவாத சிந்தனையாகவே கருதுகிறார்கள். இந்த சூழ்நிலையானது தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியதன் அதி முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது.

முழு நாட்டினதும் நன்மை கருதி எமது மிக பிரதானமான சட்டமான அரசியல் யாப்பின் புனித தன்மையை பாதுகாக்கும் முகமாக தேவையான மாற்று நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக அவசியமானதொன்றாகும் என்றும் குறிப்பிட்டார்.

 

Thu, 12/20/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை