நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தான் சிறப்பாக ஆடியமைக்கு, இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிடம் பெற்ற ஆலோசனையே காரணம் என அஞ்சலோ மெத்திவ்ஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து இலங்கை அணியை குசல் மெண்டிசுடன் இணைந்து மீட்டெடுத்து சமநிலையில் முடிக்க மெத்திவ்ஸின் சதம் முக்கிய காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெத்திவ்ஸ் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 83 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 578 எனும் இமாலய ஓட்ட இலக்குக்கு பதிலாக குசல் மெண்டிசுடன் இணைந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 274 ஓட்டங்களைப் பெற்று போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் வரை ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களைப் பெற்று களத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சாதனை மிகு இணைப்பாட்டம் வெலிங்டனின் ஆச்சர்யம் என கிரிக்கெட் வர்ணனையாளர்களால் குறிப்பிடப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
போட்டி நடைபெற முன்னர் ஏற்கனவே நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து வெலிங்டன் மைதானத்தில் இரட்டைச்சதம் பெற்ற குமார் சங்கக்காரவிடம் அவ்வாடுகளத்தில் எவ்வாறு ஆடவேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை பெற்றதாகவும் அது பெரும் உதவியளித்ததாகவும் மெத்திவ்ஸ் மேலும் தெரிவித்தார்.
from tkn