ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கியமை ஜனநாயகத்துக்கு நான் அளித்த கௌரவம்

புதிய பிரதமர் பதவியேற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை - (2018.12.16)

2015 ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற பெருவெற்றியில் நாட்டு மக்கள் பல்வேறு நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தனர். சுமார் 04 வருடங்கள் கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக கடந்த காலத்தில் நாம் அரசாங்கம் என்ற வகையில் பெற்றுக் கொண்ட வெற்றிகள், செய்த நல்ல பணிகள் பல உள்ள அதேநேரம், பல துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளும் உள்ளன. நாம் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதைப் போன்று எதிர்பார்த்த இலக்கை நோக்கி நாட்டை கொண்டு செல்ல முடியாமல் போன விடயத்தில் நாம் நாட்டு மக்களின் பக்கமே நிற்கிறோம். இந்த நிலைமையை எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் வெற்றிகொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெரியாது.

2015 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமைச்சரவை நியமிக்கப்பட்டது முதல் எமது தேர்தல் உறுதிமொழிகள் மீறப்பட்டமை பற்றி நான் உங்களுக்கு கூறியுள்ளேன். விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் அமைச்சரவை ஒதுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிபுணர் குழுவொன்றை அமைத்து அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. என்றாலும் அந்த ஆவணங்கள் பார்க்கப்பட்டனவா? என்பது பற்றி எனக்கு தெரியாது.

அன்றிலிருந்து இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் குறிப்பாக நாம் எதிர்பார்க்காத பல துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. நல்ல விடயங்கள் என்று பார்க்கின்ற போது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியமை, மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டமை, 19வது திருத்தம், சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டமை என்பனவற்றை குறிப்பிட முடியும்.

19வது திருத்தத்தின் நன்மையாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதிலுள்ள முன்னேற்றத்தை மட்டுமே நான் பார்க்கிறேன். மறுபக்கத்தில் அதனை நான் இன்று ஒரு அரசியல் பிரச்சினையாகவே காண்கிறேன். அதேபோன்று 19வது திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டதை போன்று நாட்டின் ஏனைய பதவி நியமனங்களில் அரசியலமைப்பு சபை எவ்வளவு தூரம் பக்கச்சார்பற்றதாக, நியாயமானதாக இருந்தது என்பதில் எனக்கு பிரச்சினை உள்ளது. இன்று பிரதம நீதியரசரிலிருந்து சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், சுயாதீன ஆணைக்குழுக்கள் வரை அனைத்தையும் அரசியலமைப்பு சபையே நியமிக்கின்றது. நான் கண்ட முக்கியமான விடயம் என்னவென்றால் அரசியலமைப்பு சபையில் நீதித்துறை நியமனங்களின் போது நீதித்துறையில் உள்ள சிரேஷ்ட நீதிபதிகளின் பெயர்கள் முன்வைக்கப்படுகின்ற போது அவை நிராகரிக்கப்பட்டன.

நீதித்துறையில் சில நீதிபதிகள் தொடர்பில் அவர்களுக்கு சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதில்லை என என்மீது குற்றச்சாட்டு உள்ளது. அவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளாக காரணமாக பெயர்களையும் நான் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பியிருக்கிறேன் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். அரசியலமைப்பு சபை அவற்றை நிராகரித்துள்ளது. இதன் மூலம் நீதித்துறையில் சிரேஷ்ட நீதிபதிகளாக இருக்கின்றவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனவே நீதிபதிகளை நியமிக்கின்ற போது அரசியலமைப்பு சபை பின்பற்றும் நடைமுறைகள் எவ்வளவு தூரம் பக்கசார்பற்றது, நடுநிலையானது என்பதில் பிரச்சினையுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்கான பல விடயங்கள் என்னிடம் உள்ளன.

நாம் முகங்கொடுத்த மிக மோசமான அனுபவத்தை எடுத்துக் கொண்டால் அப்போதைய அரசாங்கத்தில் இருந்த பாரிய தவறுகளின் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தோல்வியுறச் செய்து, 62 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். அந்த வகையில் அடிப்படையான விடயம் ஊழல், மோசடி என்பனவாகும். ஊழலுக்கும் மோசடிக்கும் எதிராகவே மக்கள் நேய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டது. 2015 ஜனவரி 08 ஆம் திகதி தமது வாக்குகளின் மூலம் அவ்வாறு தெரிவு செய்யப்பட்டு மூன்று மாதம் நிறைவடைவதற்கு முன்னரே இடம்பெற்ற மத்திய வங்கி கொள்ளை, 2015 ஆம் ஆண்டு இரண்டு சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் என்வனவற்றின் ஊடாக நாம் ஊழலுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டம் முழுமையாக வீண்போனது. அது மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக தகர்த்து, நல்லாட்சி அரசியல் எண்ணக்கருவையும் அழித்து விட்டது.

நான் இன்று காலையில் மத்திய வங்கி ஆளுநருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட முக்கிய பரிந்துரையான தடயவியல் கணக்காய்வு இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று கேட்டேன். இன்றுவரை அது செய்யப்படவில்லை. மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியின் பெறுமதி இவ்வளவுதான் என்று இன்னும் சரியாக கூற முடியாதுள்ளது என ஜனாதிபதி ஆணைக்குழு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இது பல வருடங்களாக இடம்பெற்று வந்துள்ளது. 2007, 2008 ஆம் ஆண்டுகளிலிருந்து இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இடம்பெற்று வந்துள்ள இந்த மோசடியினால் ஆயிரம் பில்லியனுக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் என்னிடம் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாலொன்றின் போது தெரிவித்தனர்.

இன்றுவரை எந்தவொரு கணக்காய்வின் மூலமும் இது பற்றி கண்டறியப்படவில்லை என ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தெரியும். அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கியின் ஆளுநராக தெரிவு செய்யப்பட்ட போது நான் அதனை கடுமையாக எதிர்த்தேன். என்றாலும் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு வாரத்தில் நன்றியுள்ள ஒருவன் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவுடன் எனக்கு எவ்வித பிரச்சினையும் அவசியமற்றது என்ற காரணத்தினால் அவரது அழுத்தமான கோரிக்கையின் பேரில் நான் அர்ஜுன மகேந்திரனை ஆளுநராக நியமித்தேன். அப்படி தெரிவு செய்யப்பட்ட அர்ஜுன மகேந்திரனின் இத்தகைய செயற்பாட்டினால் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று நாட்டில் பாரிய பிரச்சினையொன்று உருவானது. இது பாராளுமன்றத்திலும் நாட்டின் அரசியலிலும் முக்கிய பேசுபொருளாக மாறியது.

அந்த நிலைமையில் மத்திய வங்கியின் பணிக்குழாம் செயலிழந்த நிலையை அடைந்தது. அச்சந்தர்ப்பத்தில் நான் மத்திய வங்கிக்கு செல்வதற்கு தீர்மானித்தேன். நான் மத்திய வங்கிக்கு செல்ல தீர்மானித்ததன் பின்னர் நான் அங்கு செல்லப் போவதை அறிந்து பிரதமர் எனது வீட்டுக்கு வருகை தந்திருந்தார். அன்று என்னிடம் அவர் நீங்கள் மத்திய வங்கிக்கு செல்லப் போகின்றீர்களா? என கேட்டார். ஆம் நான் அங்கு செல்லப் போகிறேன் என கூறிய போது அதற்கு அவர் நான் அங்கு செல்வதை விரும்பவில்லை. மத்திய வங்கி எனக்குக் கீழ் உள்ளது என்றார். அதற்கு நான் 'உண்மைதான். ஜனாதிபதி என்ற வகையில் நான் அங்கு செல்ல முடியும் தானே' எனக் கூறிச் சென்றேன். நான் அங்கு செல்கின்ற போது பிரதமருடன் அர்ஜுன மகேந்திரனும் அங்கிருந்தார். அர்ஜுன மகேந்திரன் எனக்கு வழங்கிய வெற்றிலையை நான் ஒரு கையினால் எடுத்துக் கொண்டு அவரது முகத்தையும் பார்க்காமல் உள்ளே சென்றேன்.

இந்த நிகழ்வின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அர்ஜுன மகேந்திரன் இன்று இல்லை. அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை. இந்த மோசடி தொடர்ந்து ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் வந்தன. அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்றன. அமைச்சர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டார்கள் எனக் கூறி தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில் பிரதமரினதும் அமைச்சர்களினதும் தொலைபேசிகள் ஒட்டக் கேட்கப்படவில்லை என ஆணைக்குழு அறிவிப்பு செய்தது. பேர்பசுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் இன்று சிறையிலிருக்கும் சந்தேக நபர்களின் தொலைபேசிகளை பரிசீலனை செய்த போது அமைச்சர்களினதும் தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளமை பற்றி தெரிய வந்தது. எனவே இன்று கூட ஆயிரம் பில்லியனுக்கும் அதிகம் எனக் கூறும் இந்த மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன்.

நான் மஹிந்த ராஜபக்ஷவை ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமாராக நியமித்தேன். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மத்திய வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது கட்டாயம் எனக் குறிப்பிட்ட சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்த இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு திருத்தச் சட்டத்தில் சில வசனங்களே திருத்தப்பட வேண்டியிருந்தது. பாராளுமன்றத்திற்கு அது அனுப்பப்பட்டு 05 மாதங்களுக்கும் அதிகமாக அலுமாரியிலேயே வைக்கப்பட்டிருந்தது. நான் இது பற்றி பல தடவை நீதியமைச்சர் தலதா அதுகோரளவிடம் கூறினேன். அமைச்சர் கிரியெல்லவிடமும் கூறினேன். மிகுந்த சிரமத்துடனேயே அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. என்றாலும் இறுதியில் அது மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அத்திருத்தம் காலவறையறையின்றி பிற்போடப்பட்டது. அவ்வாறு பிற்போடப்பட்டமையினால் அச்சட்டம் திருத்தப்படப் போவதில்லை. இன்னும் 15, 20 ஆண்டுகளுக்கு ஆயிரம் பில்லியனுக்கும் அதிகம் எனக் கூறப்படும் இந்த மோசடி பற்றி விசாரணை இடம்பெறப் போவதில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப் போவதும் இல்லை. அந்த நிதியை மீட்கவும் முடியாது. இது இன்னும் பாரதூரமான பிரச்சினையாகும்.

அதேபோன்று அமைச்சரவையின் தீர்மானத்திற்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட சீ.சீ.எம் தொடர்பிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. உண்மையில் நான் பிரதமருக்கு எவ்வளவு தூரம் நன்றிக்குரியவனாக இருந்தேன் என்றால் ஜனாதிபதியின் அதிகாரங்களையும் பிரதமர் எடுத்துக் கொண்டு செயற்பட்டார். நான் அதுபற்றி கேட்கவில்லை. அரச தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போதும் சர்வதேச ஒப்பந்தங்களின் போதும் அவர் அவ்வாறு செயற்பட்டார். 19வது திருத்தத்தில் பிரதமருக்கு இல்லாத அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்க நடைமுறைப்படுத்தினார். நான் அதன் போது நன்றியுள்ள ஒருவன் என்ற வகையில் அமைதியாக இருந்தேன். சிங்கப்பூர் ஒப்பந்தம் பற்றி நான் ஆணைக்குழு ஒன்றை அமைத்தேன்.

அதன் பரிந்துரைகள் கடந்த வாரம் எனக்கு கிடைக்கப் பெற்றன. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பது பற்றி அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் இப்போது அதுபற்றி விரிவாக விளக்கப் போவதில்லை. அந்த அறிக்கையில் குறிப்பாக அந்த ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் வர்த்தகம், துறைமுகம், கைத்தொழில், நிதி உள்ளிட்ட குறித்த அமைச்சுக்கள் அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு பரிந்துரைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய பல்வேறு நிறுவனங்கள் அந்த பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளாது இருப்பது பாரிய தவறு என இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. எனது கருத்து அதனை அரச தலையீட்டுடன் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதாகும். அது திருத்தப்பட வேண்டும். அந்த திருத்தங்களின் போது நிபுணர்களை கொண்டு முழுமையாகவே நீக்கப்பட வேண்டுமா? திருத்தங்களுடன் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பது பற்றி சட்ட, பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என்றே நான் பார்க்கிறேன். எனவே இந்த நிலைமைகளில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் நாம் இந்த அனுபவங்களுடன் முன்னோக்கி செல்வதற்கான முறைமை எத்தகையது என்ற விடயம் பற்றியதாகும்.

இவ்வாறு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் நிறைவேற்றுத்துறையும் சட்டவாக்கத் துறையும் இதனை தீர்த்துக் கொண்டு இருந்தால் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு எமக்கு 07 வாரங்கள் எடுத்திருக்காது. இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக கூட்டப்பட்ட அனைத்து கலந்துரையாடல்களிலும் நீங்களும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சபாநாயகரும் பங்குபற்றிமைக்காக நான் மகிழ்ச்சியடைவதுடன், எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அணியினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன முன்னணியும் வருகை தந்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் சகோதர கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு பெரிதும் ஒத்துழைப்பு வழங்கினர். அது ஜனநாயக நாடொன்றில் உள்ள சுமுகமானதொரு நிலைமையும் முக்கியமானதொரு பண்பும் ஆகும் என்று நான் கருதுகிறேன். அரசியல் மேடைகளில் எதனைக் கூறியபோதும் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக மனிதாபிமான நிலைமை உள்ளது.

என்றாலும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்கத்திற்கும் இடையில் அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதில் நாம் தோல்வியுற்றோம். எனவே இது நீதிமன்றத்திற்கு சென்றது. நீதித்துறை வழங்கிய தீர்ப்பு குறித்து பொதுமக்கள் என்ன கூறுகின்றார்கள்? சட்ட நிபுணர்கள் என்ன கூறுகின்றார்கள்? என்பது பற்றி நான் கேட்டுப் பார்த்தேன். வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை, கலைக்கப்பட்டமை, பிரதமர் நியமனம், பிரதமர் நீக்கப்பட்டமை குறித்து என் மீது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக விமர்சனங்கள் முன்வைக்க்படுகின்றன.

ஏனென்றால் நான் ஒரு சட்டத்தரணி அல்ல என்பது முழு நாட்டுக்கும் தெரியும். நான் அந்த வர்த்தமானி அறிவித்தலை எனது சுயவிருப்பத்தின் பேரில் வெளியிடவில்லை. இந்த விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகள், நாட்டின் முன்னணி சட்டத்துறை நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் கலந்துரையாடித்தான் அந்த வர்த்தமானி அறிவித்தலை தயாரித்தார்கள். அப்படியில்லாமல் இது சிறு பிள்ளைகள் செய்த விடயம் அல்ல. இதற்கு சிறந்த உதாரணம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்ற போது எனது தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நாட்டின் முன்னணி சட்ட நிபுணர்கள் ஆவர். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

கடந்த காலங்களில் வர்த்தமானிகளை வெளியிட்டு நான் செய்தது சிறுபிள்ளைத்தனமான செயலாக இருந்திருந்தால் அந்த வர்த்தமானியை பாதுகாப்பதற்காக சட்ட நிபுணர்கள் முன்வந்திருக்க மாட்டார்கள்.

விசேடமாக பாராளுமன்றத்தை கலைத்ததற்காகவும் மீண்டும் தேர்தலுக்கு செல்ல வேண்டாமென்றும் நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்கள். தேர்தல் தேவையில்லை என்று நீதிமன்றத்திற்கு சென்றீர்கள். ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு பின்னணியில் ஊழல் சூழ்ந்திருக்கும் இந்த பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதியதோர் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று மக்களிடையே ஒரு கருத்து உருவானது. அது ஐக்கிய தேசியக் கட்சி வாக்காளர்கள் மத்தியிலும் ஏற்பட்டதென்பதை நான் அறிவேன். ஊழலை மேற்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியினரையும் வீட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று அவர்கள் தெரிவித்தார்கள்.

நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறாக அமைந்தலும் மக்களின் விருப்பத்தின்படி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த வழி என்னவென்றல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்தை உருவாக்குவதேயாகும். நீதிமன்ற தீர்ப்பால் மக்கள் ஆணையை இழந்து விட்டோம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அது எனது கருத்தல்ல. நான் மதகுருக்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களினிடையே கருத்துக்களை கேட்டறிவேன். அதன் போது மீண்டும் ஒரு தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்ற கருத்தை பெரும்பான்மையானவர்கள் முன்வைத்தனர். தேர்தல் வேண்டாமென்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு நீதிமன்றத்திற்கு மனுதாக்கல் செய்தனர். எதிர்காலத்தில் இவ்வகையான சூழ்நிலைகளை தடுக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே நான் உங்களிடம் இதை சுட்டிக்காட்டுகின்றேன்.

நான் உங்களுக்கு மற்றுமொரு விடயத்தை தெரிவிக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஊழலை ஒழிப்பது தொடர்பாகவே பேசி வந்தேன். மத சக்திகள், மொழி தொடர்பிலான சக்திகள், கலாசார மற்றும் சமூக சக்திகள் மிகவும் வலுவானதென்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நாட்டின் அநேகமான சந்தர்ப்பங்களில் ஆட்சி அமைப்பதற்கும் ஆட்சியை கவிழ்ப்பதற்கும் அரசியல் நிலைப்பாடுகளை விட கலாசார நிலைப்பாடுகள் உறுதுணையாக அமைந்துள்ளதென்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த காலங்களில் பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் போதும் பெரஹரவின்போது யானைகளின் பற்றாக்குறையினால் பலவித பிரச்சினைகள் ஏற்படும்போதும் அந்த பிரச்சினைகள் விகாரைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் அல்ல, சமூகம் சார்ந்த பிரச்சினைகள் என்று நான் தெரிவித்தேன். அப்போது நான் தெளிவாக கூறினேன்.

(மிகுதி நாளை)

Tue, 12/18/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை