சட்டரீதியான அரசாங்கமொன்றை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாகுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக நேற்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி தீர்ப்பையடுத்து தமக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக அலரி மாளிகைக்கு வருகை தந்தவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,
நீதிமன்றத்தால் பாராளுமன்றத்தை, (சட்டவாக்கத்தை) உறுதிப்படுத்தியமைக்கு நாம் பாராட்டுத் தெரிவிக்கின்றோம். சட்டரீதியான அரசொன்றை ஒருவாக்குவதே எமது அடுத்த கட்ட நடவடிக்கையாகும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எமக்குக் கிடைத்துள்ளது. அதற்கிணங்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்க மொன்றை உருவாக்குவோம். மக்களது எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சினைகளை நிறைவேற்றுவோம். நாம் தெரிவித்தது போல் உண்மை வெற்றி பெற்றுள்ளது 17ம் திகதி நாம் எமது கூட்டத்தை கூட்டுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் தீர்பை அடுத்து நேற்று அலரிமாளிகைக்கு வருகை தந்த ஐ.தே.க. ஆதரவாளர்கள், முனனாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.கொழும்பில் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளைக் கொளுத்தி மக்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில பிரதேசங்களில் ரபான் அடித்தும், பால்சோறு வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது. (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn