கடன் வலைக்குள் மாலைதீவை சிக்க வைத்துள்ள சீனா‍!

மாலைதீவுக்கு 1.4 பில்லியன் ​ெடாலரை இந்திய மத்திய அரசு கொடுத்ததாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இந்தியாவின் எத்தனையோ பேரிடர்கள் நடந்திருக்கின்றன. கேரள வெள்ளம், தமிழகத்தில் கஜா புயலின் கோரத் தாண்டவம் என எத்தனையோ சம்பவங்களுக்கு செலவழிக்காமல் ஏன் மத்திய அரசு மாலைதீவைக் குறி வைக்கிறது?

சீனாவைக் கட்டுப்படுத்த, இந்தியாவை பாதுகாத்துக்கொள்ள என்பதே இதற்கான பதில்.

1790 வரை சிற்றரச சுல்தான்களால் ஆளப்பட்டு வந்த 1200 சிறிய பெரிய தீவுகள், ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு மதராஸ் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போதும் இங்கிலாந்தின் பிடியிலேயே இருந்தது மாலைதீவு. 1965 -இல்தான் ஒரு சுதந்திர நாடாக உருவாகியது. வெறும் 298 சதுர கிலோமீற்றரில் 4.4 இலட்சம் பேர் வாழும் சிறிய நாடு அது.

மாலைதீவுகளில் கடலைச் சார்ந்த மீன்பிடித் தொழில்கள்தான் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருந்தன 1972 வரை. 1972இல் ஒரு உல்லாச ஹோட்டல் கட்டி புதிய சுற்றுலா பொருளாதாரத்துக்கு வழிவகுத்தார்கள். இன்று மொத்த மாலைதீவின் பொருளாதாரத்தின் 28% சுற்றுலாத் துறையை நம்பி இருக்கிறது. அதன் பிறகுதான் மீன்பிடித் தொழில்கள் எல்லாம்.

Geopolitical என்ற சொல்லை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களிலோ அல்லது ஆங்கில பத்திரிகைகளிலோ கேள்விப்படலாம். புவியியல் அமைப்பு சார்ந்து நடக்கும் அரசியலுக்கு இந்த பதத்தை பயன்படுத்துவார்கள். அதற்கு மாலைதீவுகளே சிறந்த உதாரணம்.

இந்தியாவின் தெற்குப் பகுதியின் லட்சத் தீவுகளுக்குக் கீழ் தனியாக இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு குட்டி தேசம் மாலைதீவு.

இப்போது மாலைதீவுக்கு மிக அருகில் இருக்கும் பெரிய நாடே இந்தியா தான். அதை விட்டால் இலங்கை. என்ன பிரச்சினை என்றாலும் மாலைதீவுகளுக்கு முதலில் உதவ வேண்டியது இந்தியாதான். அதற்கு வலுவான காரணம் மாலைதீவின் நில அமைப்புதான்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் உருவாகி வலுப் பெற்று வந்த காலத்தில் அன்றைய விடுதலைப் புலிகளின் பெருந்தலைகளான உமா மகேஸ்வரன் மற்றும் பிரபாகரனுக்கு இடையில் கருத்து வேறுபாடு வலுத்தது. அதனைத் தொடர்ந்து உமா மகேஸ்வரன் எல்.ரி.ரி.ஈ அமைப்பில் இருந்து பிரிந்து தனியாக புளொட் என்கிற அமைப்பைத் தொடங்கினார்.

1988 அளவில் புளொட் அமைப்பின் 80 ஆயுதம் தாங்கிய போராளிகள் திடீரென மாலைதீவுகளின் தலைநகரான மாலேயில் உள்ள விமான நிலையத்தைக் கைப்பற்றினார்கள். அமைப்பை வலுப்படுத்தவும், ஒரு நிலையான இராணுவ தளத்தை அமைத்துக் கொண்டு இயங்கவும் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்று அப்போது கூறப்பட்டது.

அன்றைய மாலைதீவின் ஜனாதிபதி மமூன் அப்துல் கயூம் டில்லிக்கு ஓடிப் போய் உதவி கேட்டார். அன்று இந்தியாவின் பிரதமர் ராஜிவ் காந்தி. அவரும் உடனடியாக Operation Cactus என்கிற பெயரில் 1600 இராணுவத்தினரை அனுப்பி 80 புளொட் அமைப்பினரையும் விரட்டி அடித்தார். 19 போராளிகள் கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 12 மணி நேரத்தில் மாலைதீவை மீட்டு எடுத்து மமூனிடமே கொடுத்தார் ராஜிவ் காந்தி.

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளே இந்தியாவின் துணிவைப் பார்த்துப் பாராட்டின. நேபாளம், பங்களாதேஷும் கூட இந்தியாவை பக்கம் பக்கமாக பாராட்டித் தள்ளின. மாலைதீவுகளுக்கும் இந்தியாவுக்குமான நெருக்கம் இந்த கட்டத்தில்தான் நல்ல நட்பாகியது.

2005-ம் ஆண்டு Booz Allen Hamilton Inc. என்கிற தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் சீனாவின் பரம இரகசிய திட்டத்தை வெளியிட்டது. அந்த திட்டத்தின் பெயர் பேர்ல்ஸ் String of pearls. மொத்த தெற்காசியாவையும் வளைத்துப் போட்டு ஒரு வலுவான கோட்டை கட்ட வேண்டும் என்பதுதான் திட்டம். அதில் மாலைதீவுகள்தான் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விலை மதிப்பில்லாது முத்து. அதற்குத்தான் குறி வைக்கிறது சீனா.

இந்த செய்தியை கேள்விப்பட்ட உடனேயே இந்திய கடற்படையினர் இந்த String of Pearls திட்டத்தின் சாத்தியங்களை ஆராய்ந்தனர். இறுதியில் மாலைதீவுகளை கைப்பற்றினால் நிச்சயமாக சீனா இந்தியாவை சுற்றி வளைத்தது போல் ஆகிவிடும் என மத்திய அரசை எச்சரித்தனர். ஆகையால் என்ன செய்தாவது மாலைதீவை இந்தியா பக்கம் இழுத்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது இந்தியா.

String of pearls செய்தி கேட்ட இந்தியா ஏப்ரல் 2006இல் Trinkat ரக விரைந்து தாக்கும் கப்பலை மாலைதீவுக்கு பரிசளித்தது. மாலைதீவுகளின் முக்கியமான 26 தீவுகளுக்கு ரேடார் கருவிகளைப் பொருத்துவது, இரண்டு ஹெலி​ெகாப்டர்களை எப்போதும் கண்காணிப்புப் பணிகளுக்கு நிறுத்துவது, இந்திய கடலோரக் காவல் படை மாலைதீவுகளுக்கும் ரோந்து சென்று அவ்வப்போது பாதுகாப்பை உறுதி செய்வது, மாலைதீவு இராணுவத்தினருக்கு அந்தமான் தீவுகளில் இராணுவப் பயிற்சி அளிப்பது என இந்தியா தன் நிலப் பகுதிகளை பாதுகாப்பது போல மாலைதீவை பாதுகாத்தது. மாலைதீவுகள் சீனாவுடன் அதீத நட்பு பாராட்டுவதால் பரிசாக தந்த இரண்டு ஹெலி​ெகாப்டர்களையும் திரும்பத் தருமாறு கேட்டது இந்தியா. இப்போது சொலிஹ் பதவி ஏற்ற பின்னர் "அட நமக்குள் என்ன, ஹெலி​ெகாப்டரை வைத்துக் கொள்ளுங்கள் என கொஞ்சி விளையாடுகிறது" இந்தியா.

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இந்தியா மற்றும் மாலைதீவு இணைந்து நடத்தும் இராணுவப் பயிற்சியின் பெயர் தான் Ekuverin. இந்தியா மற்றும் மாலைதீவு இராணுவத்தினர் சேர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பது தான் Ekuverin பயிற்சியின் நோக்கம். இதுவும் சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது.

இந்தியா, சீனாவிடம் String of pearls பற்றி கேட்பதற்குள் 2013இல் 'One Belt & One Road Initiative' என்றது சீனா. இது என்ன புதுக் கதை என்று வாயைப் பிளப்பதற்குள்... உலகச் சந்தைகளை இணைக்க, வணிகம் செழிக்க, அறிவைப் பகிர்ந்து கொள்ள, கலாசார பரிமாற்றங்களை வரவேற்க சீனாவின் போக்குவரத்து திட்டம் தான் இந்த 'One Belt & One Road Initiative'என ஊடகங்கள் முழுக்க பேச வைத்தது. சீன அரசுப் பத்திரிகையான பீபிள் டெய்லியில் பக்கம் பக்கமாக இந்த திட்டத்தின் நன்மைகளை வெவ்வேறு வார்த்தைகளில் எழுதியது. இந்த திட்டத்தின் பெயர் தான் 2016-ல் Belt & Road Initiative என பெயர் மாற்றப்பட்டது.

இது சீனாவின் String of pearls திட்டத்தின் மறைமுக பெயர் என உலகத்துக்கே தெரியும். ஆனால் என்ன தான் மிரட்டினாலும், யார் வந்து மிரட்டினாலும் சீனா இது சர்வதேச நன்மைக்கு என அமெரிக்காவைப் போலவே நாடகமாடியது. ஆனால் மறைமுகமாக தான் யோசித்துவைத்த முத்துக்களை எல்லாம் முதலீடுகள் மூலமாகவோ அல்லது இராணுவ தளம் அமைத்தோ தன் கனவுத் திட்டமான String of pearls-ஐ இந்த மேற்பூச்சுப் பெயரில் செயல்படுத்தியது சீனா.

முதலில் Djibouti-ல் தன் இராணுவ முகாமை அமைத்து "உன்னால் ஆனதைப் பார்" என இந்தியாவுக்கு எச்சரிக்ைக காட்டியது.

String of pearls-க்காக காத்திருந்த சீனா 2011-இல் திடீரென மாலைதீவு மீது அன்பு காட்டியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர் வு பங்கோ மாலைதீவுக்கு எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து ஒக்டோபர் 2012-இல் லி சங்சுன் வந்து மாலைதீவின் அன்றைய ஜனாதிபதி முகமது வகீது ஹசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாலைதீவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சிக்கு எப்போதும் சீனா உதவும் என கை குலுக்கினார். இந்தியா உஷாரானது. அதன் பின் 2014 இல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கே மாலைதீவு ஜனாதிபதியைச் சந்தித்தார்.

தெற்காசியாவை நில வழியில் ஐரோப்பிய நாடுகள் வரை வீதிகளை அமைத்தோ, வர்த்தக முதலீடுகளின் மூலமாகவோ பிடித்தாகி விட்டது. இனி கடற்கரை மட்டும் தான் பாக்கி . ஆக கடலை எப்படி ஆள்வது?

முதலில் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும். அந்த இடம் மாலைதீவுகள். மாலைதீவுகளைக் கைப்பற்றி விட்டால் ஹோமுராஸ் ஜலசந்தி, லோம்பாக் ஜலசந்தி, மலாக்கா ஜலசந்தி, மந்தெப் ஜலசந்தி போன்ற முக்கியமான நான்கு இடங்களில் இந்தியாவை முழுமையாக முற்றுகை இடலாம்.

இதற்குத்தான் சீனா மாலைதீவு மீது அதீத அன்பு காட்டி வந்தது. வருகிறது.

ஆனால் மாலைதீவின் அரசியல் தலைவர்களில் பலரும் சீனாவுக்கு ஒத்து வரவில்லை. மாலைதீவு தனிநாடாக உருவான பின் இப்ராகிம் நஸீர் 1978 வரை ஜனாதிபதியாக இருந்தார். அவருக்குப் பின் மமூன் அப்துல் கயூம்.

கயூம் காலத்தில் தான் இந்தியா Operation Cactus நடத்தி மாலைதீவைக் காப்பாற்றியது. ஆக அந்த அன்பு, நட்பு, விசுவாசத்தை 2008 வரை கயூம் காட்டினார். அதன் பின் முகமது நசித். நசித்தும் கயூமைப் போலத் தான்.

கடந்த 2013-இல் அப்துல்லா யாமீன் வந்த போது தான் சீனாவுக்கு ஜாக்​ெபாட் அடித்தது. மாலதீவை நல்ல நிலைக்கு கொண்டு வர அடிப்படைக் கட்டுமானங்கள் தேவை என சுமார் 1.3 பில்லியன் ​ெடாலர் அளவுக்கு கடன் வசதிகளைக் கொடுத்தது. ஆனால் இன்று மாலைதீவின் மொத்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 25 சதவீத வருமானத்தை சீனாவுக்கு வட்டியாக மட்டுமே கட்டிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீத் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அதில் "சீனா மாலைதீவை கடன் மூலம் சூழ்ச்சி வலை விரித்து பிடித்து விட்டது. இன்று அதில் இருந்து மாலைதீவு மீளவும் முடியாமல், தனக்கு தோன்றியதைக் கூட செய்ய முடியாமல் , மாலைதீவு மக்களுக்கு நல்லவைகளைக் கூட சீனாவிடம் கேட்டு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது" என தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

கடந்த 17 நவம்பர் 2018-இல் முகமது சொலிஹ் மாலைதீவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இவர் கொஞ்சம் இந்தியா பிரதிபலன் பாராமல் செய்த உதவிகளை மனதில் கொண்டவர். இவருடைய பதவி ஏற்பு விழாவுக்குக் கூட இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்தவர். ஆக இந்தியா தனக்கு சாதகமான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு தற்போது 1.4 பில்லியன் ​ெடாலர் தொகையை கொடுத்திருக்கிறது. இப்போது சீனாவிடம் இருந்து முழுமையாக மாலைதீவு விடுபடும் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இந்தியாவின் இந்த நன்கொடையால் சீனாவுக்கு மூக்கு உடைந்தது போல் ஆகிவிடும். இனி சீனாவுக்கு மாலைதீவு தலையசைக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்பதாலேயே இந்தியா மீதான கோபம் சீனாவுக்கு அதிகரிக்கும்.

சீனா, மாலைதீவுக்குக் கொடுத்த 1.3 பில்லியன் ெடாலர் கடனை வைத்து மறைமுகமாக மிரட்டி தனக்கு தேவையானதை செய்து வந்தது. அந்த கடன் பிரச்சினையை இந்தியா ஒரு செக்கில் கையெழுத்து போட்டு தீர்த்து விட்டது. இது சீனாவை நேரடியாக வம்புக்கு இழுப்பதற்குச் சமம். மாலைதீவு இல்லை என்றாலும் சீனாவுக்கு இலங்கை ஒரு அழுத்தமான தளமாக இருப்பதை இந்தியா மறக்க வேண்டாம் என போர் வல்லுநர்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

Sat, 12/22/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை