ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் நேற்று ஆளும் தரப்பில் இணைந்து கொண்டனர். முன்னாள் அமைச்சரும் தேசியப் பட்டியல் எம்.பியுமான விஜித் விஜிதமுனி சொய்சா, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் இவ்வாறு ஆளும் தரப்பிற்குத் தாவினர்.
பாராளுமன்றம் நேற்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கூடியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்களிடையே வாதப்பிரதிவாதம் நடைபெற்ற நிலையில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்த சமயம் எதிரணியில் அமர்ந்திருந்த மூன்று எம்.பிக்கள் சபை நடுவில் ஆளுந்தரப்புக்கு சென்று அமர்ந்து கொண்டனர்.
இவர்களை கைலாகு கொடுத்து வரவேற்ற ஆளும் தரப்பு எம்.பிக்கள் அவர்களை முன்வரிசை ஆசனங்களில் அமரவைத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சையின் நிறைவில் விஜித் விஜிதமுனி த சொய்சா விசேட உரையொன்றை ஆற்றினார்.
சபை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் பலரும் எழுந்து வந்து தமது வாழ்த்துக்களை மூன்று எம்.பிக்களுக்கும் தெரிவித்தனர்.
முன்னதாக ஏ.எச்.எம்.பௌசி,பியசேன கமகே ஆகியோர் ஐ.தே.கவுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்
from tkn