வீரரைப் போன்று பொதுஜன பெரமுனக் கட்சியில் சேர்ந்தவர்கள் இன்று எதிர்க்கட்சி பதவி கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் அதனை இல்லையென மறுப்பது வேடிக்கையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று தெரிவித்தார்.
ஐம்பத்தொரு நாட்கள் போராட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தனது புதிய பயணத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அலரிமாளிகையில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.சட்டவிரோத சதித்திட்டங்களை முறியடித்ததன் மூலம் நாட்டின் ஜனநாயகம், பாராளுமன்ற நடைமுறை ஆகியவற்றை ஐ.தே.க மேலும் பலம்பெறச் செய்திருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
"எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். சில காலத்துக்கு முன்பு வீரர்களைப் போல சென்று பொதுஜன பெரமுனக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்ட அவர், இன்று தான் பொதுஜன பெரமுனவில் இல்லையென்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்றும் பொய் கூறுகின்றார். எனினும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியிலே போட்டியிட்டனர். சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தனித்தே போட்டியிட்டிருந்தன. ஆனால் இப்போது அவர்கள் தாங்கள் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்களல்ல என தெரிவிக்கின்றனர்," என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் மக்களின் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் அவர்கள் கட்சி விட்டு கட்சி தாவப் பார்ப்பதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
from tkn