தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடியபோது சபாநாயகரினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பாராளுமன்றம் இன்று (18) பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகிய மூன்று எம்பிக்களும் பாராளுமன்ற ஆளும் தரப்பு வரிசையில் அமர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
சபை முதல்வராக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவும், ஆளும் தரப்பு பிரதம கொரடாவாக, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவும் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக, அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான, மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
அத்துடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதனையடுத்து ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியில் அங்கத்துவம் வகிப்பதால் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க முடியாது என சுட்டிக்காட்டினார்.
தற்போது பாராளுமன்றத்தில் அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn