உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகள்: இலங்கையிலிருந்து நான்கு வீரர்கள் பங்கேற்பு

சீனாவின் ஹெங்ஷேர்பெணா நகரில் எதிர்வரும் 11ஆம் திகதிமுதல் 16ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 14ஆவது FINA உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கைசார்பாக சிரன்த த டி சில்வா,கைல் அபேசிங்க,சதுசாவின்தி ஜயவீர மற்றும் திமலிபண்டார ஆகிய நான்குவீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தோனேஷியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4 தர 100 சாதாரண நீச்சல் போட்டியில் இலங்கை அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்ற சிரன்த த டி சில்வா மற்றும் கைல் அபேசிங்க ஆகியவீரர்கள 2ஆவது தடவையாக உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரிற்காக தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், இவ்விரண்டு வீரர்களும் வெளிநாட்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு இப்போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை மற்றுமொருசிறப்பம்சமாகும்.

இதில் 100 மீற்றர் சாதாரண நீச்சல், 200 மீற்றர் சாதாரண நீச்சல் மற்றும் 100 மீற்றர் மெட்லி நீச்சல் ஆகியவற்றில் தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ள கைல் அபேசிங்க, இறுதியாக 2016 இல் கனடாவில் நடைபெற்ற உலகநீச்சல் போட்டிகளில் கைல் அபேசிங்க இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

அத்துடன்,கடந்தவருடம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் இளையோர் விளையாட்டு விழாவிலும் அவர் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 100 மற்றும் 200 மீற்றர் வண்ணத்துப் பூச்சி நீச்சல் போட்டிகளில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரான சிரன்த த டி சில்வா, 2014ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற 12ஆவது உலக நீச்சல் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றியிருந்தார்.

இதேநேரம்,கொழும்பு விஷாகா கல்லூரியைச் சேர்ந்த சதுசாவின்தி ஜயவீர மற்றும் லைசியம் சர்வதேசபாடசாலையைச் சேர்ந்த திமலி பண்டார ஆகியோர் இளவயது வீராங்கனைகளாக இப்போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளனர்.

178 நாடுகளைச் சேர்ந்தசுமார் 960 வீர,வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள இம்முறை உலக நீச்சல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் உலகின் முதல் நிலைநீச்சல் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், 34 தனிநபர் போட்டிகளும், 12 அஞ்சலோட்ட போட்டிகளும் நடைபெறவுள்ள இம்முறை போட்டிகளில் இலங்கை வீரர்கள் தனிநபர் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

(பீ.எப் மொஹமட்)

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை