மாணவர்களின் விருப்பபடி படிக்க விட்டால் சாதிக்க முடியும்

மாணவர்களின் விருப்பப்படி அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க விட்டால் நிச்சயமாக சாதிக்க முடியும் என வவுனியா மாவட்டத்தில் வணிகப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் துரைராஜ் யுவதீஸ்வரன் தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வணிகத் துறையில் மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 143 ஆவது இடத்தையும் பெற்றமை குறித்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

எமது கிராமம் ஓரு பின் தங்கிய கிராமம். எமது குடும்பமும் ஒரு விவசாய குடும்பம். இந்த நிலையில் எனக்கு தரம் 10 இல் இருந்தே வர்த்தகப் பாடம் பிடிக்கும். எனது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றைப் பார்த்த பலரும் கணிதம் அல்லது விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்குமாறு வற்புறுத்தினர். ஆனாலும் நான் எனது விருப்பப் படி வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று இன்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளேன். 

எம்மைப் போன்ற பின்தங்கிய கிராமத்தில் இருந்து சாதிக்க முடியும் என்கின்ற போது வசதி வாய்ப்புக்கள் உள்ள இடங்களில் இருப்பவர்கள் இன்னும் சாதிக்க முடியும். எல்லோரும் கணிதப்பிரிவு, விஞ்ஞானப் பிரிவு என்று செல்லாது வர்த்தகப்பிரிவிலும் கல்வி கற்று இன்னும் சிறந்த சாதனைகளை பெறவேண்டும். நான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் அனைவருகும் எனது நன்றிகள் எனத் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

 

 

Sun, 12/30/2018 - 16:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை