கறுப்பு ஊடகங்கள் தொடர்பில் ஜனவரியில் விவாதம்

மகேஸ்வரன் பிரசாத்

‘கறுப்பு ஊடகங்கள்’ தொடர்பில் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தி ஊடகங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த ‘கறுப்பு ஊடகங்கள்’ முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குவது தொடர்பில் பிழையான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அவற்றுக்கான நஷ்ட ஈட்டைச் செலுத்துவதற்கான காசோலைகளைத் தயாராக வைத்திருக்குமாறும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அமைச்சரவையில் யார் இருக்கின்றனர், யார் இல்லை என்பது தொடர்பான விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற ஏனைய அமைச்சர்கள் அனைவரும் நியமிக்கப்பட்ட பின்னர் அது பற்றி பாராளுமன்றத்துக்கு நான் விளக்கமாக அறிவிக்கின்றேன். அமைச்சரவை பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

அமைச்சரவையில் யாரை நியமிப்பது, நியமிப்பதில்லையென்பது கலந்துரையாடி தீர்மானிக்கப்படுகிறது. கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் சில விடயங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டே தீர்மானிக்கப்படுகிறது. அமைச்சர்களாக நியமிக்குமாறு கூறி அனுப்பிய பெயர்ப்பட்டியலில் இல்லாத சிலருடைய பெயர்களும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் விஜிதமுனி சொய்சாவின் பெயரை நான் அனுப்பவில்லை. அமைச்சரவைக்கான பெயர்கள் பிரதமர் செயலகத்தினாலேயே ஜனாதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும். இதுபோன்று பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்படாத நான்கைந்து பெயர் பற்றிய விபரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சகல ஊடகங்களுக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்தால் பல மில்லியன் ரூபாய்களை நஷ்ட ஈடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

அமைச்சரவை நியமனம் தொடர்பில் என்னிடம் ஊடகங்கள் தொடர்புகொண்டு கேட்டனவா? நான் கூறும் கருத்தை அவர்கள் வெளியிடுவார்களா? தமது தவறான செய்தியைத் திருத்துவார்களா? கறுப்பு ஊடகங்கள் தொடர்பில் ஜனவரி மாதத்தில் விவாதமொன்றை நடத்தி அவ்வாறான ஊடகங்களின் சகல பெயர்களையும் பகிரங்கப்படுத்துவோம். இதனை ஊடகங்கள் நேரடியாக ஒலி ஒளிபரப்புச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாக இரு தரப்புக்கும் நன்மை ஏற்படும்.

அது மாத்திரமன்றி தவறான செய்திகளுடன் தொடர்புபட்ட உறுப்பினர்கள் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக பல மில்லியன் ரூபாய்களை நஷ்ட ஈடாகக் கோரினால் அவற்றை செலுத்துவதற்கான காசோலைகளை ஊடக நிறுவனங்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Sat, 12/22/2018 - 06:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை