- ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்
- அமர்வில் பங்கு பெறாதிருக்க ஐ.ம.சு.மு. தீர்மானம்
- பார்வையாளர் பகுதியில் ஊடகவியலாளர் மாத்திரம்
பாராளுமன்றம் இன்று (12) பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது.
இன்று முற்பகல் 11.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய பாராளுமன்ற அமர்விலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுபினர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் குறித்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக ஆசு மாரசிங்க மேலும் தெரிவித்தார்.
இந்த யோசனைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் அக்காட்சி இன்றைய தினம் கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யோசனைக்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்காது என, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பாராளுமன்ற அமர்விலும் பார்வையாளர் பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் பாராளுமன்ற அமர்வின்போது எம்.பிக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது பார்வையாளர் பகுதியில் இருந்தும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இது வரை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில், பார்வையாளர் பகுதியில் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn