வலிதற்ற காசோலை வழங்கியதன் மூலம் ரூ 7 கோடி 20 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவர்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்றைய தினம் (27) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ரூபா 2.5 கோடி (ரூபா 25 மில்லியன்) சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
அவர் நேற்றைய தினம் (26) பண மோசடி தொடர்பான முறைப்பாடு தொடர்பில், தனது தெஹிவளையில் உள்ள வீட்டில் வைத்து குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் (CID) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரான, மாகாண சபை உறுப்பினர் எஸ். குகவர்தன், அக்கட்சியில் அவர் வகித்த அனைத்து பொறுப்புகளிலுமிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் எதிர்வரும் வாரம் ஒன்று கூடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from tkn