பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் அமைச்சரவை உறுப்பினர்களும் அப்பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
குறித்த இடைக்கால தடைக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு, இன்று (14) உச்ச நீதிமன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தடையுத்தரவை தொடர்ந்தும் அமுல்படுத்த நீதிபதிகள் ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
அத்துடன், விசேட நீதிமன்றின் முன்னிலையில் இவ்வழக்கை விசாரிக்குமாறும், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வழக்கு தொடர்பில் நேற்றைய தினம் (13) கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. அதற்கமைய அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், நீதிபதி ஈவா வனசுந்தர இன்றிய, பூரண நீதிபதிகள் குழாமொன்றை நியமிக்குமாறு கோரியிருந்தனர். ஆயினும், இன்று (14) குறித்த கோரிக்கையை நீதிபதிகள் குழாம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான குவோ வொரொன்டோ (Quo Warranto) ரிட் கட்டளை கோரி கடந்த நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை எதிர்வரும் 2018 ஜனவரி 16, 17, 18 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் (12) நாள் குறித்திருந்தது.
from tkn