பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை பதவிகளில் நீடிப்பதற்கு எதிரான மனு எதிர்வரும் ஜனவரி 16 தொடக்கம் 18 வரை எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றைய தினம் (12) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இது தொடர்பான குவோ வொரொன்டோ (Quo Warranto) ரிட் கட்டளை கோரி கடந்த நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை எதிர்வரும் 2018 ஜனவரி 16, 17, 18 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நாள் குறித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவர்களால் குறித்த பதவிகளில் நீடிக்க அதிகாரம் இல்லை என உத்தரவிடுமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு கடந்த டிசம்பர் (03) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இன்றைய தினத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இடைக்கால தடையை நீக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோரால் கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி டுமாரோ மேன்முறையீடு செய்யப்பட்டிருந்ததோடு, அது தொடர்பான விசாரணையும் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
from tkn